
த்ரில் வெற்றி
முதலில் விளையாடிய பாகிஸ்தான் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் இந்தியா சுலபமாக வெல்லும் என எதிர்பார்த்த நிலையில், சினிமா படங்களையே மிஞ்சும் அளவுக்கு பரபரப்பு சம்பவங்களும், திருப்பங்களும் நிறைந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. முடிவில் இந்திய அணி 2 பந்துகள் எஞ்சிய நிலையில், த்ரில் வெற்றி பெற்றது.

மீண்டும் மோதல்
இந்த நிலையில், 2வது முறையாக மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டம் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி, சூப்பர் 4 சுற்றுக்கு செல்லும். இதில், குரூப் ஏ வில் இந்தியாவும், பாகிஸ்தானும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவது 99.99 சதவீதம் உறுதியாகிவிட்டது. காரணம், ஹாங்காங்கை தான் இரு அணிகளும் லீக் சுற்றில் எதிர்கொள்கிறது.

சூப்பர் 4 சுற்று
இதனால் வரும் சனிக்கிழமை முதல் சூப்பர் 4 சுற்றுகள் தொடங்கும். இதில் எந்த அணி, யாருடன் மோதும் என்பது குறித்த தகவல் வெளியாக வில்லை. இந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் பார்ப்பதற்கு ஏதுவாக வரும் ஞாயிற்றுகிழமை அன்று இந்தியாவும், பாகிஸ்தானும் மோதி கொள்ளும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றி தொடருமா?
காரணம், பாகிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தை வரும் வெள்ளிக்கிழமை விளையாடுகிறது. இதனால், ஒரு நாள் இடைவெளி விட்டு, ஞாயிற்றுகிழமை இந்தியாவுக்கு எதிரான போட்டி நடைபெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. லீக் சற்றில் அடைந்த தோல்விக்கு பதிலடி தர பாபர் அசாமும், வெற்றியை தொடர இந்தியாவும் போராடும் என்பதால் அன்றைய ஆட்டமும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.


Click it and Unblock the Notifications











