மும்பை : உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர் நடைபெற உள்ள நிலையில் ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றால் அது மிகப்பெரிய உத்வேகத்தை கொடுக்கும். மேலும் துவண்டு போய் இருக்கும் ரசிகர்களுக்கு அது ஹார்லிக்ஸ் குடித்தது போல் உற்சாகத்தை கொடுக்கும்.
இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பெற உள்ள இந்திய அணியில் கவனிக்க வேண்டிய ஐந்து வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். உலகக்கோப்பை தொடரில் யார் யார் இடம்பெறப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்க ஆசிய கோப்பை ஒரு பயிற்சி காலமாக வீரர்களுக்கு இருக்கும்.

அந்த வகையில் அனைவரின் கவனமும் கே.எல். ராகுல் மீது தான் திரும்பி உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக கே எல் ராகுல் விலகினார். அதன் பிறகு எந்த தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் எப்படி செயல்பட போகிறார்? விக்கெட் கீப்பராக எப்படி பணியாற்றுவார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர். ராகுலை போல் இந்திய அணியில் காயம் காரணமாக விளையாடாமல் இருக்கும் ஸ்ரேயாஸ், தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறார்.மேலும் 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றிருந்தார். ஸ்ரேயாஸ் வருகையால் இந்திய அணியின் நடுவரிசை பலம் பெற்றுள்ளது. மேலும் பயிற்சி ஆட்டத்தில் அவர் 199 ரன்கள் அடித்திருப்பதும் ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. இந்திய அணி ஆசிய கோப்பையில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஸ்ரேயாஸ் தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆக வேண்டும்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் பும்ரா. இவரும் 11 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு காயத்திலிருந்து விடுபட்டு திரும்பி இருக்கிறார். அயர்லாந்து தொடரில் இரண்டு டி20 போட்டியில் பும்ரா சிறப்பாக செயல்பட்டாலும், மிகப்பெரிய பரிட்சையே அவருக்கு ஆசிய கோப்பை தொடரில் தான் காத்திருக்கிறது. இந்த தொடரில் அவர் எப்படி செயல்படுகிறார்? பந்து வீசும் போது அவருக்கு உடல் அளவில் என்ன தாக்கம் ஏற்படுகிறது? வலி இல்லாமல் இருக்கிறதா என்பதை சோதிக்க இந்த தொடர் ஒரு வாய்ப்பாக அமையும்.
பும்ரா தன்னுடைய பழைய பந்துவீச்சை வெளிப்படுத்தினால் நிச்சயம் அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ரோகித் சர்மா இந்திய அணி பேட்டிங்கில் பெரிய ரன்கள் அடிக்க வேண்டுமென்றால் அது ரோகித் சர்மா கையில் தான் இருக்கிறது. ஆனால் ரோகித் சர்மா கடந்த சில காலமாக அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் விரைவில் ஆட்டம் இழந்து விடுகிறார். இதனால் ரோகித் சர்மா நிலைத்து நின்று இந்திய அணிக்கு பெரிய தொடக்கத்தை கொடுக்க வேண்டும்.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் கிங் கோலிதான். விராட் கோலி கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நன்றாக செயல்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் அணிக்குள் திரும்புகிறார். இந்திய பேட்டிங் வரிசையில் முதுகெலும்பு போல் இருக்கும் விராட் கோலி நன்றாக விளையாடினால் நாம் எந்த அணிக்கும் எதிராக கூட வெற்றி பெற முடியும். அதனால் விராட் கோலியின் பங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.