கொழும்பு : 2023 ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் அறிவித்த விவகாரம் ஆசிய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை, வங்கதேச அணிகளின் பயிற்சியாளர்கள் தங்கள் அணி மற்றும் வீரர்களிடம் ரிசர்வ் நாள் குறித்து யாரும் இதுவரை எதுவும் பேசவில்லை எனக் கூறி உள்ளனர்.

முன்னதாக அந்த இரு நாடுகளின் கிரிக்கெட் அமைப்புகளும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் வைத்துக் கொள்ள சம்மதித்ததாக தகவல் வெளியான நிலையில், பயிற்சியாளர்கள் வேறு மாதிரி கூறி இருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
ரிசர்வ் நாள் விவகாரம் : மழை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி தடைபட்டால் போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சிக்கு பெரும் பொருள் இழப்பு ஏற்படும் என்றும் போட்டிக்கான டிக்கெட் வருவாய் இழப்பை தடுக்கவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாளை அறிவித்தது. இதனால் புள்ளிப் பட்டியலில் சமநிலை அற்ற தன்மை உருவாகும்.
பயிற்சியாளர்கள் சொன்னது என்ன? : இந்த சிறப்பு விதிமுறையால் அதிகம் பாதிக்கப்படும் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளின் பயிற்சியாளர்கள் தங்கள் கருத்துக்களை கூறி உள்ளனர். வங்கதேச அணியின் பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா கூறுகையில், "ஒரு தொடரின் இடையே போட்டி விதிமுறைகளை மாற்றுவதை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. முடிவை எடுத்த பின் நாங்கள் அதில் சொல்வதற்கு ஏதும் இல்லை. முடிவை எடுக்கும் முன்பே கேட்டிருந்தால் நாங்கள் கருத்தை கூறி இருப்போம். எங்களை என்ன செய்ய சொல்கிறார்களோ அதை நாங்கள் செய்வோம்" என வேதனையுடன் கூறினார்.
என்ன செய்ய முடியும்? : இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறுகையில், "நாங்கள் இந்தப் போட்டியை ஒருங்கிணைக்கவில்லை. அதனால் எங்களால் அதிகம் எதுவும் செய்ய முடியாது. ஆனால், அந்த ரிசர்வ் நாள் காரணமாக ஒரு அணிக்கு புள்ளி கிடைத்து அது மற்ற அணிகளை பாதித்தால் அது பிரச்சனையாகும். எங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது." என அவரும் இதில் உள்ள சிக்கலை எடுத்துக் கூறினார்.
வங்கதேச கிரிக்கெட் அமைப்பு : இது பற்றி Cricbuzz இணையதளம் வங்கதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவர் அக்ரம் கானிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது. அப்போது அவர், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தங்களிடம் கேட்காமல் தான் ரிசர்வ் நாள் குறித்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் இலங்கை மற்றும் வங்கதேசம் என இரண்டு கிரிக்கெட் அமைப்புகளும் தங்களிடம் ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறி இருக்கின்றன.
என்னங்க உங்க நியாயம்? : கிரிக்கெட் என்ற விளையாட்டின் மீது கொஞ்சம் அக்கறை இருந்தால் கூட இந்த கிரிக்கெட் அமைப்புகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப விதிகளை மாற்றிக் கொண்டு இருக்க மாட்டார்கள். இங்கே ஆளுக்கு ஒரு நியாயம் என்பதையே ஒப்புக் கொள்ள வைத்து விட்டது தான் வேதனை.
சுத்த அடிமைத்தனம்.. விலை போன அணிகள்.. கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை!