மும்பை: நேபாளம் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி நாளை விளையாடவுள்ள நிலையில், நட்சத்திர வீரர் பும்ரா திடீரென மும்பைக்கு புறப்பட்டுள்ளார்.
6 நாடுகள் பங்கேற்றுள்ள ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. ஹைபிரிட் மாடலில் நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடருக்காக இந்திய அணி இலங்கையில் உள்ளது. உலகக்கோப்பை நெருங்குவதால், சீனியர் வீரர்கள் அனைவரும் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 10 மாதங்களுக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர் 16 ரன்கள் சேர்த்தார். இதன்பின் மழை பெய்ததால், ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நாளை விளையாடவுள்ளது. இதற்கான இந்திய வீரர்கள் தயாராகி வந்த சூழலில், திடீரென நட்சத்திர வீரர் பும்ரா மும்பைக்கு விமானம் ஏறியுள்ளார்.
இதனால் மீண்டும் பும்ரா காயமடைந்தாரா என்ற ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பும்ரா மும்பை திரும்புவதற்காக காரணம் தெரிய வந்துள்ளது. இந்திய அணியின் பும்ரா தனது முதல் குழந்தை பிறப்புக்காக மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இருக்க மும்பை திரும்பி வருகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசன் - பும்ரா இருவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதன்பின் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் சஞ்சனா கணேசன் கர்ப்பமானதாக தகவல் வெளியாகியது. இதனிடையே காயமடைந்த பும்ரா, தனது மனைவியுடன் அதிக நேரம் செலவிட்டு வந்தார். தற்போது அடுத்த இரு நாட்களில் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதிக்கு குழந்தை பிறக்க உள்ளது தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாகவே நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து பும்ரா விலகியுள்ளார். குழந்தை பிறப்புக்கு பின், மீண்டும் பும்ரா இந்திய அணியுடன் இணைய உள்ளார். சூப்பர் 4 சுற்று போட்டிகள் செப்.9ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே பும்ரா இந்திய அணி வீரர்களுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.