பெங்களூரு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களது முதல் ஆட்டத்தில் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்திய அணி இன்று இலங்கைக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறது.
இதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய டிராவிட் ஆசிய கோப்பை தொடர்பாக பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதில் ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி முகாம் திருப்திகரமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், இந்த பயிற்சி முகாமில் குறிப்பிட்ட வீரர்களுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இந்த நிலையில் கே எல் ராகுல் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக சுட்டிக்காட்டிய ராகுல் டிராவிட், பேட்டிங், விக்கெட் கீப்பிங் பில்டிங் என அனைத்து பயிற்சியிலும் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
எனினும் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் கே எல் ராகுலை வைத்து விபரீத முயற்சிகளை எடுக்க விரும்பவில்லை என டிராவிட் கூறியுள்ளார். கே எல் ராகுலுக்கு இன்னும் ஒரு வாரம் ஓய்வு தேவைப்பட்டால் அது அவருடைய செயல்பாட்டை மேலும் அதிகரிக்க வாய்ப்பாக இருக்கும் என்பதால் ஆசிய கோப்பை தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் ராகுல் விளையாட மாட்டார் என டிராவிட் அறிவித்துள்ளார்.

ஆசிய கோப்பையில் சூப்பர் ஃபோர் மற்றும் இறுதிப் போட்டி என இந்தியா நான்கு ஆட்டங்களிலும் அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட இருப்பதை குறிப்பிட்ட ராகுல் டிராவிட், அந்தப் போட்டிகளில் கே.எல். ராகுல் விளையாடி தன்னுடைய பார்மை நிரூபிக்க போதுமானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடல் தகுதியை எட்டி விட்டதாகவும் பயிற்சி முகாமில் அவருடைய பேட்டிங் திருப்தி அளித்ததாகவும் பயிற்சியாளர் டிராவிட் குறிப்பிட்டார். இதனிடையே கே எல் ராகுல் விளையாட மாட்டார் என டிராவிட் அறிவித்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக நடு வரிசையில் விளையாடுவார் என தெரிகிறது.