கொழும்பு : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டி முடிந்த உடன் செய்த செயல் ஒன்று சர்ச்சையாக மாறி உள்ளது.
2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. அங்கே தன் இரண்டாவது போட்டியில் நேபாள அணியை சந்தித்தது இந்திய அணி.

வீரர்கள் ஆர்வம் : அந்தப் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டிக்கு பின் கத்துக்குட்டி அணியான நேபாள அணியின் வீரர்கள் மூத்த இந்திய வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை சந்திப்பதில் ஆர்வம் காட்டினர். அவர்களிடம் ஆலோசனை பெற்றனர்.
ஆட்டோகிராப் : அப்போது கேப்டன் ரோஹித் சர்மாவை சந்தித்து ஆட்டோகிராப் கேட்டு இருக்கிறார் நேபாள அணி வீரர் சந்தீப் லாமிச்சேன். ரோஹித் சர்மாவும் அவருக்கு ஆட்டோகிராப் போட்டு, புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ஆனால், இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது.
பாலியல் வழக்கு : சந்தீப் லாமிச்சேன் மீது நேபாள நாட்டில் பாலியல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமி ஒருவரை சந்தீப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜனவரி 13 அன்றுதான் பெயிலில் வெளியே வந்தார்.
தடை நீக்கம் : அதன் பின் நேபாள கிரிக்கெட் அமைப்பு அவரை சில காலம் தடை செய்தாலும் பின் அவரை பிப்ரவரி முதல் போட்டிகளில் ஆட அனுமதி அளித்தது. ஆனாலும், வழக்கு இன்னும் முடியவில்லை. சந்தீப் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று இருக்கிறார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்.
ஸ்காட்லாந்து அணி செய்த செயல் : கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கு பின் ஸ்காட்லாந்து அணி வீரர்கள் சந்தீப்புடன் கை குலுக்க மறுத்தது கிரிக்கெட் உலகில் பேசு பொருள் ஆனது. அதே போல, விராட் கோலி, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின் சந்தீப் சந்திக்க வந்த போது நாசூக்காக அதை தவிர்த்து விட்டார்.
தெரிந்து செய்தாரா ரோஹித்? : ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர் ஒருவர் வருகிறார் என நினைத்து அவருக்கு ஆட்டோகிராப் போட்டாரா? அல்லது சந்தீப் வழக்கு குறித்து தெரிந்தும் இப்படி நடந்து கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இணையத்தில் ரசிகர்கள் இது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.