கொழும்பு : 2023 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் சூப்பர் 4 சுற்றில் மோத உள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெறப் போவது யார் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக பந்துவீச்சில் பெரிதும் நம்ப முடியாத ஷர்துல் தாக்குரை அணியில் தேர்வு செய்வது சரியான முடிவாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ரோஹித் சர்மா கூடுதல் பேட்ஸ்மேன் வேண்டும் எனக் கூறி வருவதால் பாகிஸ்தான் போட்டியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மூத்த வீரரான முகமது ஷமிக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது.
என்ன சிக்கல்? : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளில் ஒருமுறை மட்டுமே பந்துவீசும் வாய்ப்பை பெற்றது. கத்துக்குட்டி அணியான நேபாள அணிக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் 230 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தனர்.
பலவீனம் : இந்திய அணியின் பலவீனமாக பந்துவீச்சு மாறி உள்ளதையே இது சுட்டிக் காட்டுவதாக பல முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர். பேட்டிங்கில் அதிக வீரர்கள் தேவை என நினைக்கும் ரோஹித் சர்மா, பந்துவீச்சில் ஆல் -ரவுண்டர்கள் அதிகம் இருந்தாலே போதும். நிபுணத்துவம் வாய்ந்த ஷமியைக் கூட அதற்காக நீக்கலாம் என்ற முடிவை எடுத்து வருவதே இதற்கு காரணம்.
ஷர்துல் தாக்குர் : இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் பும்ரா என இரண்டு அனுபவம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் இருவரையும் சேர்ந்து பந்து வீசச் செய்தால் அது எதிரணிக்கு கடும் அழுத்ததை கொடுக்கும். ஆனால், ஷமிக்கு பதில் ஆல் -ரவுண்டராக கருதப்படும் ஷர்துல் தாக்குர் பாகிஸ்தான் போட்டியில் ஷமிக்கு பதிலாக இடம் பெற்றார். அந்தப் போட்டியில் அவர் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அடுத்த போட்டி : அடுத்து நேபாள அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா இந்தியாவுக்கு சென்றதால், ஷமி, தாக்குர் மற்றும் சிராஜ் அணியில் வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றனர். அந்தப் போட்டியில் ஷமி சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தி இருந்தார். தாக்குர் 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
திரும்பும் பும்ரா : இந்த நிலையில், அடுத்து சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது இந்திய அணி. அந்தப் போட்டிக்கு முன்னதாக பும்ரா அணியில் இணைவார். இந்த நிலையில், அந்தப் போட்டியில் ஷர்துல் தாக்குரை நீக்கி விட்டு பும்ரா, ஷமி என இரண்டு சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களை ஒன்றாக களமிறக்க வேண்டும்.
கேட்பாரா ரோஹித்? : பேட்டிங் குறித்து மட்டுமே கவலைப்பட்டு வரும் கேப்டன் ரோஹித் சர்மா, பாகிஸ்தான் போட்டியில் ஷர்துல் தாக்குரை நீக்குவாரா? அல்லது ஷமியை நீக்குவாரா? என்பதே விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.