கொழும்பு : இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆன கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
அதற்கு காரணம் இளம் வீரர் இஷான் கிஷன் தான். அவர் கே எல் ராகுலுக்கு மாற்றாக அணியில் விக்கெட் கீப்பராக இடம் பெற்றவர். ஆனால், அவரே தற்போது ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யரின் இடத்தை பறிக்கப் போகும் வீரராகவும் மாறி இருக்கிறார்.

ராகுல் காயம் : கே எல் ராகுல் விக்கெட் கீப்பராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவும் அணியில் சிறப்பாக ஆடி வருகிறார். எனினும், சில மாதங்கள் முன்பு காயம் காரணமாக அவர் ஓய்வில் இருந்ததால் இஷான் கிஷன் அணியில் வாய்ப்பு பெற்றார். தற்போது காயத்தில் இருந்து மீண்ட ராகுல் ஆசிய கோப்பை தொடரில் ஆட தயாராக இருக்கிறார்.
ஸ்ரேயாஸ் அய்யர் வருகை : இதனிடையே மற்றொரு மிடில் ஆர்டர் வீரரான ஸ்ரேயாஸ் அய்யரும் காயத்தில் இருந்து மீண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இருக்கிறார். இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு பெற்ற அவர் அதிலும் பெரிதாக ரன் குவிக்கவில்லை.
இஷான் கிஷன் அபார ஆட்டம் : ஆனால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் அணியை சரிவில் இருந்து காத்து, 81 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். மேலும், தான் ஆடிய கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நான்கு அரைசதம் அடித்து அசத்தி இருக்கிறார். மேலும், ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும் அடித்து மிரள வைத்து இருக்கிறார்.
வலுக்கும் ஆதரவு : இந்த நிலையில், இஷான் கிஷன் நல்ல பார்மில் இருப்பதால் அவரை அணியை விட்டு நீக்கக் கூடாது என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர். அவரை உலகக்கோப்பை தொடரிலும் அணியில் ஆடச் செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.
ஆசிய கோப்பை பரிசோதனை : இந்த நிலையில், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ராகுல் இருவரும் தங்கள் பார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அடுத்து இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட உள்ளது. அப்போது இருவரில் ஒருவர் அணியில் இடம் பெறலாம்.
யாருக்கு அணியில் இடம்? : அடுத்து ஆசிய கோப்பை தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் உள்ளன. அடுத்ததாக ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் உள்ளது. அப்போதும் இந்திய அணி இந்த இருவரில் ஒருவரை தேர்வு செய்ய முயலும் என கூறப்படுகிறது.