துபாய்: 2025 ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பேட்ஸ்மேன்கள் முக்கிய காரணமாக அமைந்த நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, வழக்கத்திற்கு மாறாக அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்காமல் ஏமாற்றமளித்தார். இந்த நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பும்ராவின் பந்துவீச்சு குறித்து தனது கருத்தை கூறினார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் பும்ரா 4 ஓவர்கள் வீசி, ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 45 ரன்களை வாரி வழங்கினார். இது நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மோசமான நாளாக அமைந்தது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்களைக் குவித்தனர். சிக்ஸர்களும் பறக்கவிட்டனர்.

இந்நிலையில், போட்டிக்குப் பின் இதுகுறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "அவர் ஒன்றும் ரோபோ இல்லை, அவருக்கும் எப்போதாவது ஒரு மோசமான நாள் வரலாம், அது பரவாயில்லை," என்று பும்ராவுக்கு ஆதரவாக பேசினார். மேலும், பும்ரா இந்த ஏமாற்றத்திலிருந்து மீண்டு வருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சூர்யகுமார், "ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் பொறுப்பேற்றுச் செயல்படுவது, ஒரு கேப்டனாக என் வேலையை மிகவும் எளிதாக்குகிறது. வீரர்கள் தங்களது அபாரமான குணாதிசயத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் இன்னிங்ஸின் முதல் 10 ஓவர்களுக்குப் பிறகு அவர்கள் மிகவும் நிதானமாக இருந்தனர். இடைவேளைக்குப் பிறகு, ஆட்டம் இப்போதுதான் தொடங்குகிறது என்று அவர்களிடம் கூறினேன். பும்ரா சொதப்பிய நிலையில், சிவம் துபே தனது பந்துவீச்சால் எங்களைக் காப்பாற்றினார். "முதல் இன்னிங்ஸிற்குப் பிறகு, இன்று 'கேட்ச்'களைத் தவறவிட்ட வீரர்களுக்கு ('Butter Fingers') எங்கள் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் சுற்றின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து வங்கதேச அணிக்கு எதிராக செப்டம்பர் 24 அன்று விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் வென்றால் இந்திய அணியின் இறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விடும்.