துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை 2025 தொடரில், செப்டம்பர் 14 அன்று துபாயில் நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் பிரம்மாண்டமான போட்டிக்கு இப்போதே எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே உணர்ச்சிகள் கரைபுரண்டு ஓடும் நிலையில், வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மைதானத்தில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்துப் பேசிய வாசிம் அக்ரம், "மற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளைப் போலவே இந்த முறையும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, எல்லையைத் தாண்ட மாட்டார்கள் என்று நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், "இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை உலகெங்கிலும் 100 கோடி மக்கள் பார்க்கிறார்கள். இந்தியர்கள் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று தேசப்பற்றுடன் இருப்பது போலத்தான், பாகிஸ்தான் ரசிகர்களும் தங்கள் நாட்டிற்காக ஆதரவளிப்பார்கள். இந்தப் போட்டி ஒரு பரபரப்பான கிரிக்கெட்டிற்கு ஒரு சரியான களம், ஆனால் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பது மிகவும் அவசியம்," என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று வாசிம் அக்ரம் கணித்துள்ளார். இதுகுறித்து அவர், "சமீபத்திய போட்டிகளில் இந்திய அணி சிறப்பான ஃபார்மில் உள்ளது. அதனால், அவர்களே இந்தப் போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணியாகத் தொடங்குவார்கள். ஆனால், இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளைப் பொறுத்தவரை, அந்த குறிப்பிட்ட நாளில், எந்த அணி மன அழுத்தத்தைச் சிறப்பாகக் கையாளுகிறதோ, அந்த அணியே வெற்றி பெறும்," என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் தேர்வு செய்யப்படாதது குறித்து தனது ஏமாற்றத்தையும் அக்ரம் வெளிப்படுத்தினார். "தனிப்பட்ட முறையில், பாபர் அசாம் அணியில் இருப்பதைப் பார்க்க விரும்பினேன். ஆனால் அவர் தேர்வு செய்யப்படாததால், அணியில் உள்ள மற்ற வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும்," என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதைப் பார்க்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும் வாசிம் அக்ரம் குறிப்பிட்டார். "இந்தியா-பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி ரொம்ப காலம் ஆகிவிட்டது. அது மீண்டும் நடந்தால், இரு நாட்டு ரசிகர்களுக்கும் அது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமையும்," என்று வாசிம் அக்ரம் தெரிவித்தார்.