2025 ஆசியக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாட மாட்டார்கள்.. ஏன் இந்தமுறை ODI போட்டி இல்லை?
மும்பை: 2025-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே சில நாட்கள் போர் பதற்றம் நிலவியதால், இரு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடப்பது சாத்தியமில்லை எனப் பேசப்பட்டது. எனினும், அந்தப் பதற்றம் தணிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வரும் ஜூலை மாதம் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை, இந்த ஆசியக் கோப்பைத் தொடர் நடப்பது உறுதியானாலும், அதில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் இடம் பெற மாட்டார்கள். ஏனெனில், இந்த முறை ஆசியக் கோப்பை ஒருநாள் தொடராக இல்லாமல், டி20 தொடராகவே நடைபெற உள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவின்படி, ஆசியக் கோப்பை நடைபெறும் ஆண்டுக்கு அடுத்து வரும் முக்கிய ஐசிசி தொடர் (உலகக்கோப்பை) எந்த வடிவத்தில் உள்ளதோ, அதே வடிவத்தில்தான் ஆசியக் கோப்பையும் நடத்தப்பட வேண்டும். அதன்படி, 2023 ஒருநாள் உலகக் கோப்பையை முன்னிட்டு, கடந்த 2023 ஆசியக் கோப்பை ஒருநாள் தொடராக நடத்தப்பட்டது.
தற்போது, 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளதால், அதை கருத்தில் கொண்டு 2025 செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பை T20 வடிவத்தில் நடைபெற உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர், 2024 டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்துவிட்டனர். எனவே, அவர்கள் இனி இந்திய டி20 அணியில் விளையாட மாட்டார்கள்.
இதன் காரணமாக, 2025 ஆசியக் கோப்பைத் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் இடம்பெற வாய்ப்பில்லை. அவர்களுக்குப் பதிலாக, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியே இந்தத் தொடரில் பங்கேற்கும்.


Click it and Unblock the Notifications