கொழும்பு : இந்தியா - இலங்கை அணிகள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மோத உள்ளன. இந்தப் போட்டியில் இந்திய அணியில் எந்த வீரர்கள் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி இறுதிப் போட்டியில் களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவரை எந்த காரணத்திற்காக இந்த தொடரில் பல போட்டிகளில் ஆட வைக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

ஆசியாய் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன் இந்திய அணி ஆசிய குரூப் சுற்று மற்றும் சூப்பர் 4 போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே ஷமி வாய்ப்பு பெற்றார். அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் மிக சிறப்பாகவே பந்து வீசி இருந்தார்.
ஆனாலும், அவருக்கு தொடர்ந்து போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. சிலர் அவர் உலகக்கோப்பைக்கு முக்கியமான வீரர் என்பதால் அதிக போட்டிகளில் ஆட வைக்காமல் அவரை பாதுகாத்து வருகிறார் கேப்டன் ரோஹித் சர்மா என கூறுகின்றனர்.
தற்போது பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வந்து இருப்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருவதாகவும் கூறுகின்றனர். ஆனால், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் கூட இருவரையும் சேர்த்து பந்து வீச வைக்கவில்லை அது எப்படி சரியான முடிவாக இருக்கும்? என விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மற்றொரு வேகப் பந்துவீச்சாளரான முகமது சிராஜ் மீது எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனாலும், இறுதிப் போட்டி என்பது முக்கியமான ஒன்று. இலங்கை ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு தான் அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் இந்திய அணி பகுதி நேர வேகப் பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியாவுடன் கூடுதலாக இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே ஆட வைக்க முடியும்.
ஒன்று பும்ரா. மற்றொரு வீரர் சிராஜா அல்லது ஷமியா? என்பதே இப்போதைய கேள்வி. அனுபவ வீரர் என்ற அடிப்படையில் முகமது ஷமியை தான் அணியில் ஆட வைக்க வேண்டும். குறிப்பாக ஷமி பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் வல்லவர். அது ஆட்டத்தின் பிற்பகுதில் இந்திய அணிக்கு பெரிய அளவில் பலனளிக்கும். பும்ரா யார்க்கர்கள் வீச, ஷமி ரிவர்ஸ் ஸ்விங் வீசினால் நிச்சயம் அனுபவம் குறைந்த இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறிவிடுவார்கள்.
கேப்டன் ரோஹித் சர்மா இப்போதாவது பும்ரா - ஷமியை சேர்த்து பந்து வீச வைப்பாரா?