துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை அன்று மோதுகின்றன. கடந்த ஐந்து மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், களத்தில் வீரர்கள் காட்டிய ஆக்ரோஷம், பரஸ்பரப் புகார்கள் எனப் பெரும் பரபரப்புக்கு மத்தியில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில், தோல்வியைச் சந்திக்காத ஒரே அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் இந்திய அணியின் ஆடும் லெவன் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தியாவின் துருப்புச்சீட்டான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இலங்கை அணிக்கு எதிரான கடைசி சூப்பர் 4 போட்டியில் ஓய்வில் இருந்தார். இறுதிப் போட்டி போன்ற ஒரு முக்கிய ஆட்டத்தில், அவரது அனுபவமும், துல்லியமான பந்துவீச்சும் அணிக்கு மிகவும் அவசியம். எனவே, அவர் நிச்சயம் அணிக்குத் திரும்புவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பும்ரா அணிக்குத் திரும்பும்போது, இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரில் ஒருவர் மீண்டும் பெஞ்சிற்குத் திரும்ப நேரிடும்.

இந்திய அணி நிர்வாகம், நீண்ட பேட்டிங் வரிசையை விரும்புகிறது. அந்த வகையில், பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சில் ஓரளவிற்குப் பங்களித்து வரும் சிவம் துபே, இறுதிப் போட்டிக்கான அணியில் மீண்டும் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெத் ஓவர்களில் சிறப்பாக யார்க்கர் வீசும் அர்ஷ்தீப் சிங்கை விட, பேட்டிங் திறனுக்காகவே சிவம் துபேவுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.
இந்திய அணியின் மிகப்பெரிய கவலையாகவும், கேள்விக்குறியாகவும் இருப்பது நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதிதான். இலங்கைக்கு எதிரான போட்டியின் போது, தசைப்பிடிப்பால் (Cramps) அவதிப்பட்ட அவர், முதல் ஓவரை வீசிய பிறகு மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன்பிறகு அவர் களத்திற்கே திரும்பவில்லை.
இதுகுறித்து இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மார்னே மோர்கல் பேசுகையில், "ஹர்திக் பாண்டியாவின் நிலை சனிக்கிழமை அன்று (இன்று) பரிசோதிக்கப்பட்டு, அதன்பிறகு ஒரு முடிவை எடுப்போம்," என்று தெரிவித்திருந்தார். இதுவரை அவரது உடற்தகுதி குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஒருவேளை, ஹர்திக் பாண்டியாவால் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனால், அது இந்திய அணியின் சமநிலையைப் பெரிதும் பாதிக்கும். அந்தச் சூழ்நிலையில், பந்துவீச்சை வலுப்படுத்த அர்ஷ்தீப் சிங் அணிக்குள் வர வாய்ப்புள்ளது. ஆனால், அது இந்தியாவின் பேட்டிங் வலிமையைப் பலவீனப்படுத்தும்.
தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காத இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர், இறுதிப் போட்டியிலும் பெஞ்சில் அமரவே அதிக வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கான உத்தேச இந்திய அணி (India's Playing XI):
அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (உடற்தகுதி உறுதியானால்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.