Asian Games 2026: ஜப்பானை சுருட்டி செமி பைனல் சென்ற இந்திய மகளிர் அணி.. 5 ஓவரில் முடிந்த மேட்ச்
நகோயா: 2026 மகளிர் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நிஷினில் நடந்த 4-வது காலிறுதிப் போட்டியில் சொந்த மண்ணில் ஆடிய ஜப்பான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 15 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இமாலய வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜப்பான் அணி, இந்திய வீராங்கனைகளின் அனல் பறக்கும் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 19.5 ஓவர்களில் வெறும் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஜப்பான் அணியில் அதிகபட்சமாக அயகா கட்டோ 25 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர்.

இந்திய அணி தரப்பில் அபாரமான சுழற்பந்து வீச்சை வெளிப்படுத்திய ஸ்ரீ சரணி 4 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளி அசத்தினார். ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.
இதையடுத்து 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் கண்ட இந்திய அணியில், தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா முதல் ஓவரில் இருந்தே ருத்ரதாண்டவம் ஆடினார். பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த அவர் வெறும் 15 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 40 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
குணாளன் கமலினி ரன் ஏதுமின்றியும், பாரதி புல்மாலி 6 ரன்களிலும் வெளியேறினர். இறுதியில் ரிச்சா கோஷ் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க, இந்திய அணி வெறும் 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி அதிக பந்துகள் (90 பந்துகள்) மீதமிருக்க வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Click it and Unblock the Notifications


