ஆசிய போட்டி 2026 கோலாகல தொடக்கம்.. இந்திய கொடியை எந்தி வந்த மானு பாக்கர், பவன் செரவாத்
ஐச்சி-நகோயா: 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழா பிரம்மாண்டமான முறையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் உள்ள மிசுஹோ பார்க் தடகள மைதானத்தில் பல்வேறு நிர்வாகக் குழப்பங்களுக்கு மத்தியில், இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழா இரண்டு மணி நேர கலை நிகழ்ச்சிகளுடன் அரங்கேறியது.
இந்தத் தொடக்க விழாவில் ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ, பேரரசி மசாகோ, இளவரசர் அகிஷினோ, இளவரசி கிகோ மற்றும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் ஜோவான் பின் ஹமத் அல் தானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்தத் தொடக்க விழாவின் வீரர்கள் அணிவகுப்பில், இந்தியக் குழுவை பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் கபடி வீரர் பவன் செஹ்ராவத் ஆகியோர் வழிநடத்திச் சென்றனர். 503 வீரர்கள் அடங்கிய இந்தியக் குழு மைதானத்திற்குள் நுழைந்தபோது இவர்கள் இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர்.
முன்னதாக, குண்டு எறியும் வீரர் தஜிந்தர்பால் சிங் தூரின் தொடக்க விழாவுக்கான பிரத்யேக ஆடை சரியான நேரத்தில் கிடைக்காததால், அவருக்குப் பதிலாக பவன் செஹ்ராவத் கொடி ஏந்திச் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.
தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு குறித்துப் பேசிய பவன் செஹ்ராவத், போதிய உறக்கம் இல்லை மற்றும் கடுமையான கால அட்டவணைகளுக்கு மத்தியிலும், இந்த கௌரவம் தனக்கு மிகுந்த ஆற்றலையும் உற்சாகத்தையும் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
யுகிஹிகோ சுட்சுமி இயக்கிய இந்தத் தொடக்க விழா, "ஹார்மோனிக் ஹார்ட் பீட்" என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெற்றது. புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் நீண்டகாலப் போட்டிகளுக்கு மத்தியில், ஆசியா முழுவதும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கொண்டாடுவதை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. பாரம்பரிய ஜப்பானிய கலை நிகழ்ச்சிகளோடு பன்னாட்டு நாடுகளை வரவேற்கும் விதமாக இந்த விழா வடிவமைக்கப்பட்டிருந்தது.
43 விளையாட்டுகளில் 369 தங்கப் பதக்கங்களுக்காக, 45 நாடுகளில் இருந்து 11,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கின்றனர். நாடுகளின் அணிவகுப்பில் ஆப்கானிஸ்தான் முன்னிலையில் செல்ல, அதைத் தொடர்ந்து பஹ்ரைன் அணிவகுத்தது.
இதற்கிடையில், டோக்கியோவிற்கு அருகிலுள்ள சுகுபா பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வரும் இந்திய தடகள குழுவினர், போட்டிகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நகோயாவை வந்தடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications


