
சிறப்பான 29 போட்டிகள்
ஐபிஎல் 2021 தொடர் கடந்த மாதம் 9ம் தேதி துவங்கப்பட்டு 29 போட்டிகள் சிறப்பான வகையில் நடந்து முடிந்தது. ஐபிஎல் அணி வீரர்களுக்கு கொரோனா பாதித்ததையடுத்து அந்த தொடரை தள்ளி வைக்கும் முடிவை பிசிசிஐ எடுத்தது. நேற்றைய தினம் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகிகள் மேற்கொண்ட அவசரக் கூட்டத்தையடுத்து ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

திருப்பி அனுப்பும் நடவடிக்கை
தற்போதைய நிலையில் உடனடியாக ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாது என்பதால் ஐபிஎல்லில் விளையாடிய வெளிநாட்டு வீரர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இன்று முதல் வீரர்கள் தங்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

சிறப்பான கொண்டாட்டம்
இந்த கொரோனா காலத்தில் வீடுகளில் முடங்கிய ரசிகர்களுக்கு சிறப்பான கொண்டாட்டத்தை கடந்த ஒரு மாதகாலமாக ஐபிஎல் போட்டிகள் கொடுத்து வந்தது. இதை கருத்தில் கொண்டே தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளை நடத்தும் எண்ணத்தில் இருந்தததாகவும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது.

எப்போது துவங்கும்
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் அது மீண்டும் எப்போது துவங்கும் என்ற கேள்விகள் ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான காலத்தை தாங்கள் யோசித்து வருவதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தலைவர் பதில்
ஆனால் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் எப்போது துவங்கும் என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளை பாதியில் நிறுத்தியதால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் நடத்துவதில் பிசிசிஐ பின்வாங்காது என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











