மும்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டத்தை போல் எனது வாழ்வில் எந்தவொரு ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸையும் பார்த்ததில்லை என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
கிரிக்கெட்டை விளையாடும் ஒவ்வொரு சிறுவனின் மூளையிலும், ஜெயிக்கவே முடியாத போட்டியை ஒற்றை ஆளாக வெல்ல வேண்டும் என்ற கற்பனை காட்சிகள் ஓடிக் கொண்டே இருக்கும். அப்படி கற்பனையில் மட்டும் பார்த்த ஆட்டத்தை நேற்று கிளென் மேக்ஸ்வெல் கண்முன் கொண்டு வந்துவிட்டார். 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த போது, ஆஃப்கானிஸ்தான் அணி வெல்லும் என்று அனைவரும் நினைத்தார்கள்.

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் யாரும் கண்டிராத ஆட்டத்தை வெளிப்படுத்தி மேக்ஸ்வெல் அற்புதம் செய்திருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் முதல்முறையாக 100 பந்துகளை எதிர்கொண்டுள்ள மேக்ஸ்வெல், 128 பந்துகளில் 201 ரன்கள் விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அழிவு பாதைக்கு திரும்பி கொண்டிருந்த ஒருநாள் கிரிக்கெட்டுக்கு புதிய உயிர் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம்.
மேக்ஸ்வெல் ஆடிய இன்னிங்ஸை பார்த்து வர்ணனை செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், ஒரு நிமிடம் திணறி போனார் என்றே சொல்லலாம். நான், ஷேன் வாட்சன் மற்றும் இயன் ஸ்மித் மூவருமே ஏராளமான கிரிக்கெட்டை விளையாடியதோடு, எண்ணற்ற கிரிக்கெட் போட்டிகளை பார்த்துள்ளோம். ஆனால் இதனை போல் எங்கும், எப்போதும் பார்த்ததே இல்லை. முதல்முறையாக அதிசயத்தை பார்க்கிறேன் என்று பிரமித்து பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இது தான் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இன்னும் சில ரசிகர்கள் தரப்பில், இது மிகச்சிறந்த இன்னிங்ஸ். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இதுதானா என்ற சந்தேகத்துடன் விவாதம் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், ஜத்ரானின் மிகச்சிறந்த சதத்தால் ஆஃப்கானிஸ்தான் அணி சிறந்த இலக்கை நிர்ணயித்தது. சிறப்பாக தொடங்கியதோடு, 70 ஓவர்கள் வரை மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடியது ஆஃப்கானிஸ்தான். ஆனால் ஆஸ்திரேலியாவின் தலைவிதியை மாற்ற மேக்ஸ்வெல்லுக்கு கடைசி 25 ஓவர்கள் போதுமானதாக இருந்தது. என் வாழ்க்கையில் பார்த்த சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் இதுதான் என்று பாராட்டியுள்ளார்.