பெங்களூரு: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் போடப்பட்ட பின் பாபர் அசாம் பேச வந்த போது, ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பல்வேறு சர்ச்சைகளுடன் முடிவடைந்தது. குறிப்பாக அகமதாபாத் ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களை விமர்சித்த விதமும், அவர்களை பார்த்து எழுப்பப்பட்ட "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷமும் தேசிய அளவிலான விவாதமாக மாறியது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் டாஸ் போட வந்த போதே ரசிகர்கள் அவரை வம்புக்கு இழுத்தனர்.

அகமதாபாத் ரசிகர்களின் மோசமான நடத்தையை பாகிஸ்தான் அணி நிர்வாகமும், பிசிபி-யும் ஐசிசி வரை கொண்டு சென்றது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்கும் வகையில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் Sorry Pakistan என்ற ஹேஷ்டாக் கீழ் கருத்துகளை பதிவிட்டனர். இந்த விவாதம் தற்போதும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் அகமதாபாத் போட்டிக்கு பின் இன்று பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து களமிறங்கியுள்ளது. இந்த போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து டாஸ் முடிவை சொல்வதற்காக பாபர் அசாம் அழைக்கப்பட்டார்.
அப்போது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமுக்கு பெங்களூரு கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். அவர் பெயரை சொல்லிய உடன், ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் வீரர்களிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த போட்டியில் டாஸ் போட வந்த போது பாபர் அசாம் கிண்டல் செய்யப்பட்டார்.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணி மீண்டும் தென்னிந்தியாவில் விளையாடுகிறது. இதன் மூலம் நல்ல கிரிக்கெட்டை தென்னிந்திய ரசிகர்கள் எப்போதும் ஆதரிப்பார்கள் என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.