கொல்கத்தா: உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை 500 ரன்களுக்கு மேல் விளாசிய வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய டேவிட் மில்லர் 116 பந்துகளில் 101 ரன்கள் விளாசி அசத்தினார்.

ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் மற்றும் ஹெட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் 213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் - டேவிட் வார்னர் கூட்டணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இவர்கள் இருவரும் பவுண்டரிகளாக விளாசி தள்ளினர்.
முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டேவிட் வார்னர் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் விளாசி டேவிட் வார்னர் சாதனை படைத்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் 10 இன்னிங்ஸ்களில் விளையடியுள்ள வார்னர் 2 சதங்கள் உட்பட 528 ரன்களை விளாசியுள்ளார்.
இதற்கு முன்பாக 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் டேவிட் வார்னர் 647 ரன்களை விளாசினார். இதன் மூலமாக 2வது முறையாக உலகக்கோப்பை தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த சாதனையை படைக்கும் 3வது வீரர் என்ற பெருமையையும் டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.
இதற்கு முன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் 1996 மற்றும் 2003 ஆகிய உலகக்கோப்பை தொடர்களில் 500 ரன்களுக்கு மேல் விளாசினார். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2019 மற்றும் 2023 ஆகிய உலகக்கோப்பை தொடர்களில் 500 ரன்களுக்கு மேல் விளாசி அசத்தியுள்ளார்.