லண்டன்: இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 144 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
வரலாற்றை திரும்பி பார்த்தால் இதே நாளில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 174 பந்துகள் விளையாடி வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதேபோன்ற ஒரு இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் புஜாரா விளையாடுவார் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.

ஆனால் அது அப்படியே இந்திய அணிக்கு ரிப்பீட்டாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 144 பந்துகள் விளையாடி அரைசதம் அடித்துள்ளார். இவரின் விக்கெட்டை வீழ்த்த ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் மற்றும் ஜடேஜா என்று இந்திய அணியின் 5 வீரர்களும் பெரும் போராட்டத்தையே நடத்தினர். ஆனால் அவர்களின் முயற்சிக்கு, எந்த பலனும் கிடைக்கவில்லை. அதேபோல் ஸ்டீவ் ஸ்மித்தை அச்சுறுத்தும் வகையிலான ஃபீல்டிங்கை கூட இந்திய அணி நிறுத்தவில்லை.
ஒருபக்கம் இந்திய பவுலர்களின் கவனத்தை திசைதிருப்பியதோடு, டிராவிஸ் ஹெட்டை அதிரடியாக ஆட அறிவுறுத்தி ஒட்டுமொத்தமாக ஆட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். இந்திய கேப்டன் எந்தப் பக்கம் ஃபீல்டர்களை நிறுத்துகிறாரோ, சரியாக அதனை கணித்து ஸ்டீவ் ஸ்மித் வீடியோ கேம் போல் ஆடிய ஷாட்கள் இந்திய ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் மூலம் 60க்கு கீழ் குறைந்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தின் டெஸ்ட் பேட்டிங் சராசரி, மீண்டும் 60ஐ கடந்துள்ளது.
இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் இந்திய ரசிகர்கள் அஸ்வினை விளையாட வைத்திருக்க வேண்டும் என்று விமர்சித்து வருகின்றனர். அதேபோல் டாஸ் வென்ற ரோகித் சர்மா தவறான முடிவை எடுத்ததாகவும் கடுமையாக சாடி வருகின்றனர்.