லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணி வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டும் தான் எடுக்க முடிந்தது.
முதல் நாள் ஆட்டம் நேரம் முடிவில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் அடித்துள்ளது. இதில் டிராவிஸ் ஹெட் 146 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 95 ரன்களும் அடித்து களத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவடைந்த உடன் செய்தியாளர்களுடன் பேசிய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், டாசை இழந்த பிறகு நாங்கள் சிறப்பான பணியை முதல் நாளில் செய்திருக்கிறோம் என நினைக்கிறேன். பந்து புதிதாக இருந்தபோது கடுமையாக உழைக்க வேண்டியது இருந்தது. நாங்கள் ஏற்படுத்திய தொடக்கத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அதிக அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயிற்சி ஆட்டம் மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணி போன்ற தொடர்களில் விளையாடி இருக்கிறேன். ஆனால் இம்முறை சூழல் வித்தியாசமாக இருந்தது. இந்த தொடருக்காக நான் நல்ல முறையில் பயிற்சி செய்து வந்தேன். மனதளவிலும் உடலளவிலும் நாம் சரியான நிலையில் இருக்க வேண்டும். அதுதான் வெற்றி பெற ரகசியம்.
இன்றைய ஆட்டத்தில் நானும் இந்திய வீரர்களின் பந்துவீச்சால் சோதிக்கப்பட்டேன். பவுலர்கள் சில திட்டங்களை எனக்காக தீட்டியது அவர்களுடைய பந்து வீச்சிலே தெரிய வந்தது. எனினும் சூழலை சரியாக புரிந்து கொண்டு களத்தில் நின்றேன். கடினமாக இருந்த காலத்தை கடந்தேன். அதன்பிறகு களத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருந்தேன். ஸ்மித் போன்ற ஒரு வீரர் எதிர் முனையில் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டால் எனக்கு என்னுடைய பணி ஈசியாக இருக்கும்.
இதனால் ஸ்மித்துடன் பேட்டிங் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஸ்மித் உடன் பேட்டிங் செய்யும்போது அவருடைய விக்கெட்டை எடுக்க தான் பந்துவீச்சாளர்கள் கடுமையாக முயற்சி செய்வார்கள். இதனால் பந்துவீச்சாளர்களின் ரேடாரில் நான் சிக்க மாட்டேன். எனக்கு ஸ்மித் துணையாக விளையாடவில்லை. அவருக்கு துணையாக தான் நான் களத்தில் நிற்கிறேன் என நினைக்கிறேன்.
தற்போது ஆடுகளத்தில் பந்து அவ்வளவு வேகமாக பேட்டிற்கு வரவில்லை. புதிய பந்து தான் கொஞ்சம் சவாலாக இருந்தது. ஆடுகளம் கொஞ்சம் வேகம் எடுத்தால் பேட்டில் பந்து பட்டு ஸ்லீப்பில் கேட்ச் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.