லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஃபாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், 2வது நாளில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்களுடன் தொடங்கினர்.
முதல் நாளில் தடுமாறிய இந்திய அணி, பவுலர்கள், இரண்டாவது நாளில் தங்களது யுத்திகளை மாற்றி, ஷாட் பால்களை வீசினர். இதனால், ஆஸ்திரேலிய வீரர்களின் ரன் குவிப்பு வேகம் குறைந்தது. சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்மித் 121 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் அலேக்ஸ் கெரி 48 ரன்களில் வெளியேற, மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் குறைந்தபட்சம், ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் பக்கமாவது வந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் களமிறங்கியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட , ரோகித் சர்மா 15 ரன்களும் , கில் 13 ரன்களும். புஜாரா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, 31 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி, பொறுப்பாக விளையாடி 14 ரன்கள் சேர்த்து மிட்செல் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். இதனால், 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இதனையடுதது, ஜோடி சேர்ந்த ரஹானேவும், ஜடேஜாவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 48 ரன்களில் நாதன் லயான் பந்தில் வெளியேறினார். தற்போது 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 151 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது, ரஹானே 29 ரன்களுடனும், கேஎஸ் பரத் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க மேலும் 118 ரன்கள் தேவைப்படுகிறது.