லண்டன்: இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களை குவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணி ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூரின் அபாரமான போராட்டத்தால் 296 ரன்கள் சேர்த்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து வந்த ஆஸி. அணியின் டேவிட் வார்னர் 1 ரன்னிலும், கவாஜா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதன்பின்னர் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் - லபுஷேன் கூட்டணி வேகமாக ரன்கள் சேர்க்க தொடங்கியது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் முன்னிலையும் 250 ரன்களை கடந்தது. இந்த நிலையில் ஜடேஜா அட்டாக்கில் வந்தார். ஜடேஜா சுழலுக்கு ஸ்டீவ் ஸ்மித் திணறுவது இந்திய அணிக்கு தெரிய வந்தது.
இதனால் மீண்டும் மீண்டும் ஜடேஜா அட்டாக் செய்ய, பிரஷரை இந்திய அணிக்கு திருப்ப முயன்ற ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த டிராவிஸ் ஹெட்டிற்கு இந்திய அணி மீண்டும் ஷார்ட் பால் திட்டத்தை செயல்படுத்தியது. ஒரு பக்கம் சிராஜ் ஷார்ட் பால்களாக வீச, இன்னொரு பக்கம் ஜடேஜா அட்டாக் செய்து கொண்டே இருந்தார். இதனால் பொறுமை இழந்த டிராவிஸ் ஹெட் ஜடேஜாவை அட்டாக் செய்ய முயன்று 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 111 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின்னர் வந்த கேமரூன் க்ரீன், லபுஷேனுக்கு சிறப்பாக கம்பெனி கொடுத்தார். இதனால் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 296 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கைகளே இந்தப் போட்டியில் ஓங்கியுள்ள நிலையில், 4வது நாள் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
4வது நாளின் முதல் செஷனிலேயே ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட் செய்தால் மட்டுமே இந்திய அணி வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஓவல் மைதானத்தில் அதிகபட்சமாக விரட்டப்பட்ட இலக்கே 264 ரன்கள் தான். இதனால் இந்திய அணியின் பந்துவீச்சு விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு, ரன்களை கட்டுப்படுத்தும் வகையிலும் செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.