லண்டன்: விராட் கோலி மற்றும் புஜாரா இருவரையும் ஆஸ்திரேலியா வீரர்கள் முதல் சில ஓவர்களிலேயே வீழ்த்தவில்லை என்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெல்வது எளிதாக இருக்காது என்று ஆஸி. ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி ஆடிய ருத்ர தாண்டவத்தை யாராலும் மறக்க முடியாது. அதேபோல் 2018-19 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை புஜாரா என்ன பாடுபடுத்தினார் என்பதும் அனைவருக்கும் தெரியும். இந்த இரு வீரர்களும் அபாரமான ஃபார்மில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் 2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.

இதற்காக இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வீரர்கள் பற்றி ஆஸ்திரேலிய அணியினருக்கு ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், 2 மாதங்களுக்கும் மேலாக இந்திய அணியின் புஜாரா இங்கிலாந்து சசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்தின் தட்பவெட்ப சூழலுக்கு புஜாரா நீண்ட நாட்களாக ஏற்கனவே பழகி கொண்டுள்ளதால், அவர் மேலும் அபாயகரமான வீரராக மாறி இருக்கிறார். அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரு சதங்களும், 6 அரைசதங்களும் விளாசி விராட் கோலி பீஸ்ட் ஃபார்மில் இருக்கிறார்.
இதனால் விராட் கோலி மற்றும் புஜாராவை பற்றி மட்டுமே ஆஸ்திரேலியா வீரர்கள் அதிகளவில் விவாதிப்பார்கள் என்று நிச்சயம். ஏனென்றால் ஓவல் மைதானம் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா ஆடுகளத்தை போன்றதுதான். விராட் கோலியும், புஜாராவும் ஆஸ்திரேலியா மைதானங்களில் என்ன செய்திருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் விராட் கோலி, புஜாரா ஆகியோரின் விக்கெட்டை முதல் சில ஓவர்களிலேயே வீழ்த்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா வீரர்கள் முனைப்புடன் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.