லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 444 ரன்களை ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த சாதனை இலக்கை இந்திய அணி சேஸிங் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 4ஆம் நாள் ஆட்டத்தை 123 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணி தொடங்கிய நிலையில், லபுஷேன் 41 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து கேமரூன் க்ரீன் - அலெக்ஸ் கேரி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸி. அணியின் முன்னிலை 340 ரன்களை கடந்த போதும், இருவரும் எச்சரிக்கையாகவே ஆடி வந்தனர்.
இந்த நிலையில் ஜடேஜா வீசிய பந்தில் கேமரூன் க்ரீன் 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து உணவு இடைவேளை முடிவில் ஆஸ்திரேலிய அணி 201 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் இந்திய அணி வீரர்கள் அடுத்த 4 விக்கெட்டை விரைந்து வீழ்த்துவார்கள் என்று பார்க்கப்பட்டது. ஆனால் உணவு இடைவேளைக்கு வந்த அலெக்ஸ் கேரி - ஸ்டார்க் இணை விரைவாக ரன்கள் சேர்க்க தொடங்கியது. சிறப்பாக ஆடிய அலெக்ஸ் கேரி அரைசதம் விளாசி அசத்தினார்.
இதனால் ஒரு கட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் களத்திலேயே விரக்தியை காட்டினார். ஆடுகளத்தில் எந்த உதவியும் இல்லாததால், விக்கெட் வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். இதனால் புதிய பந்துக்காக காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் புதியப் பந்து வந்த பின் ஷமி - சிராஜ் கூட்டணி அட்டாக்கில் வந்தது. அதில் ஷமி பந்துவீச்சில் ஸ்டார்க் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேமராக்கள் அனைத்து கம்மின்ஸ் பக்கம் திரும்பியது. ஆட்டத்தை டிக்ளேர் செய்வார் என்று பார்க்கப்பட்ட நிலையில், உடனடியாக பேட்டிங் செய்ய களமிறங்கினார்.

ஆனால் நீண்ட நேரம் அவரால் களத்தில் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஷமி பந்துவீச்சில் 5 ரன்களில் ஆட்டமிழந்த கம்மின்ஸ், உடனடியாக டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 443 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணி வெற்றிபெற 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனை இலக்கை எப்படி இந்திய பேட்ஸ்மேன்கள் சேஸ் செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் இன்னும் ஒன்றரை நாட்கள் ஆட்டம் மீதமிருக்கும் சூழலில், இன்றைய நாளில் விக்கெட் கொடுக்காமல் ஆடினால் மட்டுமே வெற்றியை பற்றி யோசிக்க முடியும். அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.