லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது. லண்டனில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரஹானே 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 173 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி தங்களது 2வது இன்னிங்சில் களமிறங்கியது.
முதல் இன்னிங்சில் தடுமாறிய இந்திய பவுலர்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்து, 2வது இன்னிங்சில் கொஞ்சம் பொறுப்பு உணர்வுடன் பந்துவீசினர். அதிரடி விரர் டேவிட் வார்னர் 1 ரன்னிலும், கவாஜா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுதது ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபஸ்சேன் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
ஸ்மித் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட்டும் 18 ரன்களில் வெளியேறினர். இந்த நிலையில் 123 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோருடன் 4வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது.
இதில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் மார்னஸ் லாபஸ்சேன், இன்று எந்த ரன்னும் எடுக்காத நிலையில், புஜாராவிடம் கேட்ச் ஆனார். இதனையடுத்து அலெக்ஸ் கேரி மற்றும் கேமிரான் கிரின் ஆகியோர் தற்போது பொறுமையாக விளையாடி வருகின்றனர். 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை 200 ரன்களில் சுருட்டினால், இந்திய அணிக்கு 373 ரன்கள் வெற்றி இலக்காக கடைசி இன்னிங்சில் இருக்கும்.

அப்போது 2வது இன்னிங்சில் இந்திய விரர்கள் அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தால், இந்தியாவுக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வெற்றி இலக்கு 400 ரன்களுக்கு மேல் சென்றால், இந்திய அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், தற்போது வரை ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தான் தொடர்கிறது. இதன் காரணம், இந்தியாவின் முதல் இன்னிங்சிஸ் சொதப்பல் தான்.