ஆஸ்திரேலியா: எதிர்வரும் ஐபிஎல் 2021 தொடரில் வீரர்கள் கலந்து கொள்வது குறித்து, சூழலைப் பொறுத்து அனுமதி அளிக்கப்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக, தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. இந்நிலையில், ஆஸி., கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி, ஐபிஎல் தொடர் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில், ஐபிஎல் 2021 தொடரில் கலந்து கொள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கண்டிப்பாக தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும். கடந்த ஐபிஎல்-லே ஒரு முன்மாதிரியாகத் தான் நடத்தப்பட்டது.
வீரர்கள் பயோ பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன. ஆகையால், இம்முறையும் ஐபிஎல்-ல் ஆஸி., வீரர்கள் பங்கேற்கலாம். சூழலைப் பொறுத்து, ஒவ்வொரு வீரருக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டதால், இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2021-க்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சூழ்நிலைக்கு ஏற்ப தனித்தனியாக வீரர்களின் தேவை குறித்து ஆய்வு செய்த பிறகு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.