மெல்போர்ன்: ஆஸ்திரேலியா-இந்தியா நடுவே மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. விராட் கோஹ்லி-ரஹானே ஜோடி இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக பேட் செய்து இந்தியாவை தோல்வியின் விளிம்பில் இருந்து மீட்டெடுத்தனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான போட்டித் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை தழுவியது இந்திய அணி.
இந்நிலையில் பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்பட்ட 3வது டெஸ்ட் மெல்போர்ன் நகரில் தொடங்கியது. டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 530 ரன் குவித்தது. இந்த ரன்னுக்கு இந்தியா பதில் சொல்லட்டும் என்று கொக்கரித்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்.
இந்தியாவின் முதல் இன்னிங்சில் பிற வீரர்கள் வழக்கம்போல சொதப்பினாலும் விராட் கோஹ்லி 169 ரன்களும், ரகானே 147 ரன்களும் எடுத்து கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி தந்தனர். இருப்பினும் ஆஸ்திரேலியாவைவிட 65 ரன்கள் குறைவாக இருந்தபோது இந்தியா 465 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது.
இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 9 விக்கெட் இழப்பிற்கு 318 ரன் எடுத்து இன்று காலை டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய வீரர் மார்ஷ் 99 ரன்னில் அவுட்டானார். எனவே இந்தியாவுக்கு 384 ரன்கள் இலக்காக அமைந்தது.
இமாலய ரன்னை ஒரே நாளில் துரத்தி பிடிப்பது கஷ்டம் என்பதால் ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் தடுப்பாட்டம் ஆட முயன்றனர். இருப்பினும் தவான் ரன் ஏதும் எடுக்காமலும், முரளி விஜய் 11 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
இதன்பிறகு விராட் கோஹ்லியும், ரஹானேவும் இணைந்து விக்கெட் சரிவில் இருந்து அணியை மீட்டனர். இக்கட்டான நேரத்திலும் சிறப்பாக ஆடிய கோஹ்லி 99 பந்துகளில் 54 ரன்கள் விளாசிவிட்டு ஹாரிஸ் பந்து வீச்சில் ஜோ பர்ன்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே 117 பந்துகளில் 48 ரன் எடுத்து ஹசில்வுட் பந்து வீச்சில் ஷான் மார்ஷிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த ஜோடி 85 ரன்கள் எடுத்தது.
பின் வரிசையில் களமிறக்கப்பட்ட புஜாரா 70 பந்துகளை சந்தித்து 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது, ஆஸ்திரேலிய வெற்றிக்கு 4 விக்கெட்டுகளே தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கேப்டன் டோணியும், பவுலர் அஸ்வினும் இணைந்து தடுப்பாட்டம் ஆடி மேலும் விக்கெட் வீழ்வதை தடுத்தனர்.
இந்திய அணி 174 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ஆட்டம் முடிய 4 ஓவர்கள் பாக்கியிருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தும், இந்திய கேப்டன் டோணியும் இணைந்து ஆட்டத்தை டிராவில் முடித்துக்கொள்ள சம்மதித்தனர். எனவே 4 ஓவர் எஞ்சியிருந்த நிலையிலேயே ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளதால், பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிவிட்டது.