லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி களத்தில் இருக்கும் வரை ஆஸ்திரேலிய அணியால் நிம்மதியாக இருக்க முடியாது என்று அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு கடைசி நாளில் 280 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வெறும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே போதுமானது. ஆனால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் சூழலில், களத்தில் விராட் கோலி - ரஹானே இருவரும் நம்பிக்கையாக விளையாடி வருகிறார்கள்.

ஏற்கனவே காபா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு இதுபோன்ற சூழலில் ரிஷப் பண்ட் கொடுத்த அதிர்ச்சி அனைவருக்கும் நினைவு இருக்கும். யார் மறந்தாலும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்த ஜஸ்டின் லாங்கர் மறந்திருக்கவே மாட்டார். ஏனென்றால் விராட் கோலி இல்லாத ஒரு இந்திய அணியால் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸி. வீரர்களை வீழ்த்தவே முடியாது என்ற எண்ணத்தையே ரிஷப் பண்ட் சுக்குநூறாக உடைத்தார்.
இன்று ரிஷப் பண்ட் இல்லையென்றாலும் களத்தில் விராட் கோலி உள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேசுகையில், விராட் கோலி களத்தில் இருக்கும் வரை இந்திய அணியால் நிச்சயமாக இந்த டெஸ்ட் போட்டியை வெல்ல முடியும். மாவீரர்களால் தான் அசாத்தியங்களை செய்து முடிக்க முடியும். விராட் கோலி அப்படியான வீரர். அதனால் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி முடிக்கும் வரை ஆஸ்திரேலிய அணியால் நிம்மதியாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் விராட் கோலி குறித்து நாசிர் ஹுசைன் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட்டில் சேஸிங்கின் போது அனைவருக்கும் தேவையான வீரராக இருப்பவர் விராட் கோலி. அவர் இந்திய அணிக்காக களத்தில் உள்ளார். 5ஆம் நாளின் பகல் நேரத்தில் விராட் கோலி விளையாடப் போகிறார். இதற்கு மேல் எதையும் சொல்ல விரும்பவில்லை என்று புகழ்ந்துள்ளார்.