மும்பை: 2025 மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி ஜெயிக்க வாய்ப்பே இல்லை என தலைக்கனத்துடன் நினைத்த ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனைகள், போட்டியின் முடிவில் உறைந்து போய் நின்று இருந்தனர். அவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு சில நிமிடங்கள் ஆனது.
இந்தப் போட்டிக்கு முன்பு வரை ஆஸ்திரேலியா வெல்லும் என அனைவரும் எண்ணினர். அதற்கு ஏற்ப, ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிராக அதிக முறை வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. மறுபுறம் இந்திய மகளிர் அணி இந்த உலகக் கோப்பை தொடரிலேயே இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்திருந்தது. அதனால் இந்திய அணியின் மீது அனைவருக்கும் சந்தேகம் இருந்தது.
அதனால், ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தப் போட்டியில் எளிதாக வெற்றி பெறலாம் என நினைத்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் எடுத்தது. இதற்கு முன் உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் இந்திய மகளிர் அணி 300 ரன்கள் எடுத்ததில்லை என்பதால் இந்த முறையும் தோல்வியடையும் என ஆஸ்திரேலிய அணி நம்பியது.

ஆனால், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அபாரமாக ஆடினர். 36-வது ஓவர் வரை இந்த ஜோடி அபாரமாக ரன் குவித்தது. அப்போது இந்திய அணி 226 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அப்போது ஆஸ்திரேலிய அணி அதிக தன்னம்பிக்கையுடன் காணப்பட்டது. இந்திய அணி இந்த விக்கெட்டுக்குப் பிறகு அழுத்தத்திற்கு உள்ளாகி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடையும் என நினைத்தது. இதற்கு முந்தைய காலங்களிலும் இந்திய அணி சேஸிங்கில் இதே போலவே பல தோல்விகளை சந்தித்து இருந்தது.
அடுத்து வந்த தீப்தி ஷர்மா 41-வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து இருந்தார். அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்தது. விக்கெட் இழந்தாலும் வெற்றி இலக்கை நெருங்கியதால் இந்திய அணி சற்று ஆசுவாசத்துடன் விளையாடியது. ஆனால், ஆஸ்திரேலியா அணி இதை எதிர்பார்க்கவில்லை.
அடுத்து வந்த ரிச்சா கோஷ் தனது பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை ஆடினார். அவர் 16 பந்துகளில் 26 ரன்களைச் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். அது ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்திய அணி எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 134 பந்துகளில் 127 ரன்கள் எடுத்து இருந்தார்.
இந்திய அணி 35-வது ஓவருக்குப் பிறகு வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தோல்வியடையும் என நினைத்த ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்திய அணியின் வெற்றியால் அதிர்ச்சி அடைந்தது. ஆஸ்திரேலிய வீராங்கனைகள் அனைவரும் மைதானத்திற்கு வெளியே, அதிர்ச்சியுடன் இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வீழ்த்தவே முடியாது என சொல்லப்பட்ட ஆஸ்திரேலியா மகளிர் அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தி மாபெரும் வரலாறு படைத்திருக்கிறது. அடுத்து நவம்பர் 2 அன்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.