ஆஸ்திரேலிய வீரர்கள் இனியும் எனது நண்பர்கள் கிடையாது.. வேதனையோடு அறிவித்தார் கோஹ்லி
தரம்சாலா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை இனியும் நண்பர்களாக கருத முடியாது என்று பொட்டில் அடித்ததை போல பொளேர் என கூறிவிட்டார் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி.
நடந்து முடிந்த ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லி கடுமையாக குறி வைத்து தனிப்பட்ட தாக்குதல்களுக்கு உள்ளானார். அவரது கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டு காய் நகர்த்தல்கள் முன் வைக்கப்பட்டன.
ஆஸ்திரேலிய இன்னாள், முன்னாள் வீரர்கள், அந்த நாட்டு மீடியாக்கள் இணைந்து இந்த இரக்கமற்ற தாக்குதலை கோஹ்லியை நோக்கி நடத்தின.

கேலி, கிண்டல்
விராட் கோஹ்லி தோள்பட்டையில் காயம்பட்டு துடித்ததை கூட கேலி செய்து சிரித்தனர் அந்த நாட்டு வீரர்கள். டிஆர்எஸ் அப்பீல் செய்வதற்கு பெவிலியனை நோக்கி பார்த்து கள்ள ஆட்டம் ஆடினார் அந்த நாட்டு அணி கேப்டன் ஸ்மித்.

ட்ரம்புடன் ஒப்பீடு
ஸ்மித் பற்றி புகார் கூறிய விராட் கோஹ்லியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் ஒப்பிட்டு அந்த நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு ரசித்தன. முரளி விஜயை கெட்ட வார்த்தை போட்டு திட்டினார் ஸ்மித். ஜடேஜாவுடன் வம்பிழுத்தார் ஆஸி. கீப்பர் வேட்.

நிருபர் கேள்வி
இதுபோன்ற சச்சரவுகளால் கடுப்பில் உள்ளார் விராட் கோஹ்லி. நிருபர்களிடம் இன்று கோஹ்லி பேட்டியளித்தபோது, ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் நட்பை கடைபிடிக்க விரும்புவதாக, இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் முன்பாக கூறியிருந்தீர்களே, அதே கருத்தில் உறுதியாக உள்ளீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

இனிமேல் அப்படி இல்லை
இதற்கு பளிச்சென, இல்லை என பதிலளித்தார் கோஹ்லி. நான் அப்படித்தான் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் நடந்தவை எனது எண்ணத்தை தவறு என காட்டிவிட்டன. இனிமேல் என் வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தை வராது என தடாலடியாக கூறிவிட்டார் விராட் கோஹ்லி.


Click it and Unblock the Notifications