லண்டன்: கடைசி நேரத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்காக ஆஸ்திரேலியா வீரர்கள் நீண்ட நாட்களாக இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் மற்று8ம் ஹேசல்வுட் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடிய பின், இங்கிலாந்து சென்றனர். இதனிடையே ஐபிஎல் தொடரின் போதே ஆஸி. வீரர் ஹேல்சவுட்டிற்கு காயம் ஏற்பட்டிருந்தது.

இதனால் முதல் பாதி ஐபிஎல் தொடரில் ஹேல்சவுட் பங்கேற்கவில்லை. இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியுடன் இணைந்தாலும், சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். இதையடுத்து இங்கலாந்தில் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்த ஹேசல்வுட், தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அவர் பந்துவீசும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல் பத்திரிகையாளர்கள் பலரும் ஆஸி. அணியின் பயிற்சியில் ஹேசல்வுட் சிறப்பாக பந்துவீசுவதாக கூறி வந்தனர்.
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், காயம் காரணமாக ஜோஷ் ஹேசல்வுட் அணியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆஸி. அணியின் மைக்கேல் நெசர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதுவரை ஆஸ்திரேலியா அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். அதேபோல் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஆடி வந்த இவர், அண்மையில் சசக்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசி இருந்தார்.
கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய அணி ஹேசல்வுட் விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலாண்ட் ஆகியோர் அணியில் இருப்பது பலமாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இவர்கள் மூவரும் அணியில் இடம்பிடித்தால் 4வது வேகப்பந்துவீச்சாளராக கேமரூன் க்ரீன் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.