
தோல்வியுடன் முடித்த சிஎஸ்கே
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதியில் தொடர் வெற்றிகளுடன் நடைபோட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் அணியாக பிளே ஆஃப் முன்னேறியது. தோனியின் மோசமான ஃபார்ம் மட்டுமே, அணியின் மைனஸாக இருந்தது. ஆனால், அதன் பிறகு சூழலே மாறிவிட்டது. அணியின் மிடில் ஆர்டர் கடுமையாக சொதப்ப தொடங்கியது. குறிப்பாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் சரியாக விளையாடவில்லை எனில் சென்னை அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இவர்கள் இருவரும் நன்றாக விளையாடினால் வெற்றி, இல்லையேல் தோல்வி என்பது எழுதப்படாத விதியானது.

10 வீரர்களுடன் சிஎஸ்கே
மிடில் ஆர்டர் வீரர்கள் மொயீன் அலி, ரெய்னா, ரெய்னாவுக்கு பதில் களமிறக்கப்பட்ட ராபின் உத்தப்பா, அவ்வப்போது ராயுடு, தோனி என்று வரிசையாக பேட்டிங் ஆர்டர் சறுக்கலுக்கு உள்ளானது. குறிப்பாக தோனி, மொயீன் அலி, ரெய்னா ஆகியோர் உச்சக்கட்ட சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். கேப்டன் தோனி பேட்டிங் செய்வதையே மறந்துவிட்டார் என்று பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அப்பட்டமாக தெரிகிறது. இப்போது அவரை சிஎஸ்கே 10 வீரர்களுடன் விளையாடுகிறது என்றே நினைக்க வேண்டியுள்ளது.

லுங்கி ங்கிடிக்கு தேவலை
இது பேட்டிங்கில் உள்ள குறை. பவுலிங்கிலும் சென்னை அணியால் பெரிதாக எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் எந்த இம்பேக்ட்டும் இல்லை. ஆரம்ப கட்ட ஓவர்கள், டெத் ஓவர்கள் என எதிலும் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அவர் எந்த வகை ஸ்பெஷலிஸ்ட் பவுலர் என்று அவருக்கும் தெரியவில்லை, அணிக்கும் தெரியவில்லை. இருந்தாலும், லுங்கி ங்கிடிக்கு அவர் தேவலை என்ற ரீதியில் தான் தோனி அவரைப் பயன்படுத்தி வருகிறார்.

தோனி முடிவு
இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான Qualifier 1 போட்டியில், கட்டாயம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது தோனி அணி. இதனால், பவுலிங்கில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவில் தோனி இருப்பதாக தெரிகிறது. தொடர்ச்சியாக தாக்கம் ஏற்படுத்த தவறும் ஹேசில்வுட்டுக்கு பதில், மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப் அணியில் சேர்க்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜேஸன், அங்கு பெரியளவு கண்டுகொள்ளப்படவில்லை. இந்த சீசனில் அவர் ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு மாற்று வீரராக சென்னை அணியின் சேர்க்கப்பட்டார்.

முடிவில் இருந்து பின்வாங்கும் தோனி
பொதுவாக, ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் போட்டிகளில், அணியில் பெரியளவில் மாற்றமே செய்யாதவர் கேப்டன் தோனி. ஒன்றிரண்டு மாற்றங்கள் கூட இருக்காது. ஏனெனில், வெற்றிக் கூட்டணியை எப்போதும் மாற்ற விரும்பாத கேப்டன் அவர். ஆனால், சென்னை விளையாடிய கடைசி மூன்று போட்டிகளில், மிக மோசமாக தோற்றிருப்பது, தோனியை தனது முடிவில் இருந்து பின்வாங்க வைத்திருப்பதாக தெரிகிறது. இதனால், அவர் பவுலிங்கில் ஜேஸனுக்கு வாய்ப்பு கொடுக்கும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











