லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்காக தயாராகி வரும் டேவிட் வார்னர், தனது ஓய்வு குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் பேட்டிங் ஃபார்ம் மோசமாகி வருகிறது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஆஷஸ் தொடரில் பங்கேற்பதற்காக லண்டனில் தீவிர பயிற்சியில் டேவிட் வார்னர் ஈடுபட்டு வருகிறார். கடந்த முறை ஆஷஸ் தொடரில் பிராட் பந்துவீச்சில் தொடர்ந்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனால் இங்கிலாந்தில் வார்னரின் பேட்டிங் சராசரி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கூட இல்லை.

இதனால் இந்த ஆஷஸ் தொடருடன் டேவிட் வார்னரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் வார்னர் தனது ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார். அதில், 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து வந்திருக்கிறோம். அனைத்து போட்டிகளுமே முக்கியமானது. குறிப்பாக ஆஷஸ் தொடரில் ரன்கள் சேர்த்தால் மட்டுமே சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக களமிறங்குவேன். இங்கு ரன்கள் சேர்த்தாலும் அடுத்த ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணான சிட்னியில் விளையாடும் டெஸ்ட் போட்டியே கடைசி போட்டியாக இருக்கும்.
ஆஷஸ் தொடரில் எவ்வளவு சிறப்பாக சேர்த்தாலும், சிட்னியில் ஆடும் போட்டியோடு ஓய்வு பெற்றுவிடுவேன். நிச்சயமாக அடுத்ததாக வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட மாட்டேன். அதன்பின்னர் சில சர்வதேச கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடி எனது ஃபார்மை தக்க வைத்துக் கொள்வதே திட்டமாக உள்ளது. 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவதே என் எண்ணமாக உள்ளது. அதற்கு முன் ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது.
ஆனால் பிப்ரவரிக்கு பின் டி20 உலகக்கோப்பை மட்டுமே என் இலக்காக இருக்கிறது. ஓய்வுக்கு பின் உள்ளூர் போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் உள்ளது. ஏன் ஷீல்டு ஆட்டங்களில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக மீண்டும் களமிறங்க கூட வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதுவரை ஆஸ்திரேலியா அணிக்காக 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர், 8158 ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.