லண்டன்: இந்திய அணியின் ரஹானே - ஷர்துல் தாக்கூரின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்துள்ள நிலையில், உணவு இடைவேளைக்கு முன் கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரில் தாகூர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அந்த பந்து மூன்றாம் நடுவரால் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து தடுமாறிய நிலையில், 3ஆம் நாளின் முதல் ஓவரிலேயே கேஎஸ் பரத் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அஜிங்கியா ரஹானே - ஷர்துல் தாக்கூர் கூட்டணி இணைந்தது.
இதையடுத்து ஷர்துல் தாக்கூர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரஹானே தேவையான நேரத்தில் பவுண்டரிகளை விளாசி அசத்தினார். சிறப்பாக ஆடிய ரஹானே, டெஸ்ட் கிரிக்கெட்டில் 26வது அரைசதத்தை விளாசி அசத்தினார். இதனிடையே ஷர்துல் தாக்கூர் கொடுத்த இரு கேட்ச் வாய்ப்புகளையும் ஆஸ்திரேலிய அணி ஃபீல்டர்கள் தவறவிட்டனர். இதன்பின்னர் ஷர்துல் தாக்கூரும் பவுண்டரியை விளாச தொடங்கினார்.
ஆஸி. அணியின் கம்மின்ஸ், போலாந்த், க்ரீன், ஸ்டார்க் என்று அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து அட்டாக் செய்தனர். இருந்தும் இந்திய அணியின் இரு பேட்ஸ்மேன்களும் கடுமையாக போராடினர். அரைசதம் விளாசிய அதிக பவுண்டரிகளை ரஹானே விளாச தொடங்கினார். இதனால் இந்திய அணியின் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது.

ஒருகட்டத்தில் வேறு வழியில்லாமல் லயனை அட்டாக்கில் கொண்டு வர, முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி ரஹானே வரவேற்றார். ஆனால் மனம் தளராத கம்மின்ஸ், மீண்டும் அட்டாக்கில் வந்தார். அப்போது ரஹானே பேட்டில் எட்ஜாகி வார்னர் கைகளில் கேட்ச் சென்றது. ஆனால் அதனை அவர் தவறவிட்டார். பின்னர் உணவு இடைவேளைக்கு முன் கடைசி ஓவரிலும் ஷர்துல் தாக்கூர் எல்பிடபிள்யூ முறையில் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டார்.
அதனை மேல்முறையீடு செய்ய, அந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. நேற்றும் ரஹானேவுக்கு நடுவர் அவுட் கொடுத்திருந்த நிலையில், கம்மின்ஸ் வீசிய பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி உணவு இடைவேளையின் போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்துள்ளது. ரஹானே 89 ரன்களுடனும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருவரின் இணைந்து 133 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.