மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடருக்கான அணியை தேர்வு குழுவில் புதிய தலைவரான அஜித் அகார்கர் அண்மையில் தேர்வு செய்தார்.
இதில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் வேகப்பந்து வீச்சில் அனுபவம் குறைந்த வீரர்களுக்கு இடம் கிடைத்தது.

இதில் ஆர்ஸ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார், உம்ரான் மாலிக் என நான்கு வேக பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம் பிடித்திருக்கிறார்கள். கூடுதலாக ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக இருக்கிறார்.
இந்த நிலையில் துலீப் கோப்பையில் விளையாடி வந்த ஆவேஷ் கானுக்கு திடீரென்று காயம் ஏற்பட்டு இருக்கிறது. பில்டிங் செய்யும் தற்போது ஆவேஷ் கானுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை பொருட்படுத்தாமல் அவர் மீண்டும் பந்து வீசியதால் தற்போது தோள்பட்டையில் வலி ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. 26 வயதான ஆவேஷ் கான் திறமை இருந்தும் போதிய வாய்ப்பு இல்லாததால் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார்.இந்த நிலையில் ஆவேஷ் கானுக்கு பெரிய வாய்ப்பை அஜித் அகார்கர் வழங்கியிருந்தார்.
ஆனால் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் இந்த தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. ஏற்கனவே போதிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இந்திய அணி தடுமாறும் நிலையில், ஆவேஷ் கானின் காயம் இந்திய அணி நிர்வாகத்திற்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ஆவேஷ் கான் அந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றால் துலீப் கோப்பையில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய சிவம் மவி அல்லது சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று ஆவேஷ் உடன் அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடிய இஷான் போரேலும் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நன்றாகவே பந்து வீசி வருகிறார். ஆனால் அவர் ஒரு முறை கூட இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.