அயோத்தி : அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22 ஆம் தேதி திங்கட்கிழமை கோலாகலமாக நடைபெறுகிறது. இந்தத் திறப்பு விழாவில் பல பிரபலங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் கிரிக்கெட் உலகில் இருந்து எந்தெந்த வீரர்களுக்கு இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனுப்பி விடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர்.

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சினுக்கு இந்து கோவிலின் கடவுள் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த விழாவில் சச்சின் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
தோனியையும் அவருடைய மனைவியையும் நேரில் சந்தித்து விழா அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்தனர். எனினும் இந்த விழாவில் தோனி பங்கேற்பாரா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நட்சத்திர வீரர் விராட் கோலி.
கோலிக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்பதால் இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கோலியும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவுக்கும் விழா ஏற்பாட்டாளர் சார்பாக வீடு தேடி அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கும் ராமர் கோயில் கும்பாபிஷே நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழக பாஜக நிர்வாகிகள் அஸ்வினை சந்தித்து இந்த அழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணி தற்போது 25ஆம் தேதி தான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால் 22 ஆம் தேதி ஓய்வு நாள் என்பதால் பல கிரிக்கெட் வீரர்கள் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது.