லக்னோ : ஐபிஎல் தொடரில் கடந்த முறை லக்னோ அணிக்காக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஆயுஸ் பதோனி. இம்முறை பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடப்பு சீசனில் முதல் சில போட்டிகளில் ஆயுஸ் பதோனி, பெரிய அளவில் சாதிக்கவில்லை.
இந்த நிலையில் ஆயுஸ் பதோனி, பெங்களூர் அணிக்கு எதிராக 30 ரன்கள் அடித்தார். அதன் பிறகு 5,1 மற்றும் 8 ரன்களை மட்டுமே ஆயுஷ் பதோனி எடுத்தார்.இந்த நிலையில் தற்போது ஆயுஷ் பதோனியை லக்னோ மூன்றாவது வீரராக களம் இறக்கியது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஆயுஸ் பதோணி 24 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதில் மூன்று பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இந்த நிலையில் இந்த அதிரடி ஆட்டத்திற்கான காரணம் குறித்து பேசிய ஆயுஸ் பதோனி, எனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன்.
இன்று எனக்கு அந்த தருணம் கிடைத்தது. இதனை நான் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு அணிக்காக பங்களிப்பு அளித்ததை மிகவும் மகிழ்ச்சியாக எண்ணுகிறேன். நான் பேட்டிங் செய்ய களத்திற்கு சென்ற போது ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தது. எனவே இன்னிங்ஸ் முழுவதும் நின்று விளையாட வேண்டும் என நினைத்தேன்.
நான் களத்துக்கு செல்லும்போது எங்கள் அணி நிர்வாகம் என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆட சொன்னார்கள். உன்னுடைய ஷாட்களை அடித்து மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட சொன்னார்கள். நாங்கள் களத்தில் விளையாடும் போது சாதனை இலக்கை தொட வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. மோசமான பந்தை அடித்து ஆட வேண்டும்.
ஒவ்வொரு பந்துக்கும் ஏற்ப வகையில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்று தான் நினைத்தோம்.நான் களத்துக்கு செல்லும் போது என் மனதை காலியாக தான் வைத்திருந்தேன். எங்கள் அணி நிர்வாகம் மோசமான பந்தை அடித்து ஆட சொன்னார்கள். அதற்கு கிடைத்த வெற்றி ஆக தான் இதனை கருதுகிறேன் என்று ஆயுஷ் பதோனி கூறியுள்ளார். இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 27 பவுண்டரிகளையும், 14 சிக்ஸர்களையும் அடித்தது குறிப்பிடத்தக்கது.