கேப் டவுன்: பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன பாபர் அசாம் கிரிக்கெட் உலகின் மிக அரிதான சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மட்டுமே இதுவரை செய்து இருந்த அந்த சாதனையை மூன்றாவதாக செய்து இருக்கிறார் பாபர் அசாம்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆடியது. அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாபர் அசாம் 11 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்த போதும் டெஸ்ட் போட்டிகளில் 4001 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டினார்.

தனது 56வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த மைல் கல்லை எட்டி இருக்கிறார். அவர் முன்னதாக 123 ஒருநாள் போட்டிகளில் 5957 ரன்கள் எடுத்து இருந்தார். அதேபோல 128 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4223 ரன்கள் எடுத்து இருக்கிறார். இதன் மூலம் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சர்வதேச அளவில் 4000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.
மேலும், உலக அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் அவர் செய்து இருக்கிறார். மேலும், இந்திய வீரர் அல்லாத ஒருவர் இந்த சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் தனித்தனியே 4000 ரன்கள் என்ற மைல் கள்ளை கடந்த வீரர்களாக இருந்தனர்.
அந்த சாதனையை உலகின் வேறு எந்த பேட்ஸ்மேனும் இதுவரை தொட முடியாமல் இருந்தது. அப்படி ஒரு சாதனையை தொட்டு இருக்கிறார் பாகிஸ்தானின் பாபர் அசாம். அவர் கடந்த சில ஆண்டுகளாக மோசமான ஃபார்மில் இருக்கிறார். அப்படி இருந்தும் இந்த சாதனையை அவர் செய்து இருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்து உள்ளது.