சென்னை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கிங் கோலி பேட்டிங் செய்ய உள்ளே நடந்து வந்த போது badass பாடல் ஒலிக்கப்பட, அந்த வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நடந்து ஆடுகளத்திற்கு வரும் போது, ஒவ்வொரு முறையும் ஒரு பிஜிஎம் ஒலிக்கப்படும். மற்ற மைதானங்களில் எல்லாம் சாதாரண இந்தி மற்றும் தெலுங்கு குத்து பாடல்கள் ஒலிக்கப்பட, சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் டிஜே வீரர்களின் குணநலன்களுக்கும், அவர்களின் மாஸ்-க்கும் ஏற்ற பாடல்களையும் பிஜிஎம்களையும் ஒலிக்கவிடுவார்.

அந்த வகையில் கடந்த முறை 4 ஆண்டுகளுக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கிய சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு, விக்ரம் படத்தில் தீம் பாடலை ஒலிக்கப்பட்டார். "Once upon a time" என்ற வரிகள் தொடங்குவதற்கும் தோனி ஆடுகளத்தின் நடுப்பகுதிக்கு வருவதற்கும் சரியாக அமைந்தது. அதேபோல் மற்றொரு முறை தோனி நடந்து வருகையில், "நெருப்புடா.. நெருங்குடா.. பார்ப்போம்" என்ற பாடல் ஒலிக்க சேப்பாக்கம் மைதானமே அதிர்ந்தது.
அந்த அளவிற்கு தோனியின் எண்ட்ரிக்கு மாஸ் அதிகரிக்கப்பட்டு கொண்டே இருக்கும். அந்த வகையில் நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் விராட் கோலி சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கினார்.

அப்போது தான் சேப்பாக்கம் மைதான டிஜே தனது வேலையை தொடங்கினார். லியோ படத்தில் இடம்பெற்றுள்ள badass பாடல் ஒலிக்கப்பட்டது. அந்த பாடலுக்கும் விராட் கோலியின் கதாபாத்திரத்திற்கும், அந்த மாஸ் நடைக்கும் மொத்தமாக ஒத்துபோக சேப்பாக்கம் மைதானமே அதிர்ந்தது. மாஸ் எண்ட்ரிக்கு ஏற்க விராட் கோலியும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த போதும் எந்தவித பிரஷரும் இல்லாமல் விராட் கோலியும் கேஎல் ராகுலும் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். சதம் அடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தாலும், 85 ரன்கள் விளாசியதற்காக ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை அளித்தனர்.