டாக்கா: நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் இஷ் சோதியை வங்கதேச அணியின் ஹசன் மஹ்முத் மன்கட் செய்து விக்கெட் வீழ்த்தினார். ஆனால் இஷ் சோதி வெளியேறிய போது கேப்டன் லிட்டன் தாஸ் மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் சூழலில், இந்திய ஆடுளங்கள் மற்றும் தட்பசெட்ப சூழலுக்கு பழக்கப்படுத்தி கொள்வதற்காக நியூசிலாந்து அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் 2வது போட்டி இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் ஃபெர்குசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஹென்ரி நிக்கல்ஸ் 49 ரன்களும், டாம் பிளன்டெல் 68 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 166 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து நியூசிலாந்து அணி தவித்தது.
இந்த சூழலில் ஆல்ரவுண்டர் இஷ் சோதி களமிறங்கி விரைவாக ரன்கள் சேர்த்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 200 ரன்களை கடந்தது. இந்த நிலையில் 46வது ஓவரை வீச ஹசன் மஹ்முத் அழைக்கப்பட்டார். அப்போது 4வது பந்தை வீச வரும் போது பவுலிங் முனையில் நின்றிருந்த இஷ் சோதி கிரீஸில் இருந்து வெளியில் வந்தார். இதனை கவனித்து ஹசன் மஹ்முத் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார்.
இதனால் குழப்பமடைந்த நடுவர், தீர்ப்பை மூன்றாம் நடுவருக்கு அனுப்பினார். இதன்பின் இஷ் சோதிக்கு அவுட் கொடுக்கப்பட்டது. அப்போது திடீரென வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் நடுவருடன் ஆலோசனை செய்து, இஷ் சோதியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தார். இதனால் உற்சாகமடைந்த இஷ் சோதி, லிட்டன் தாஸ்-க்கு நன்றி தெரிவித்ததோடு, ஹசன் மஹ்முத்தை கட்டியனைத்து நன்றி கூறினார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன்பின் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. பின்னர் வந்த வங்கதேச அணி 41.1 ஓவர்களில் 168 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி 15 ஆண்டுகளுக்கு பின் வங்கதேச அணியை வங்கதேச மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.