மும்பை : டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் தான் உள்ள நிலையில் இந்தியாவைத் தவிர மற்ற அணிகள் எல்லாம் அந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறது.
குறிப்பாக டி20 உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
இதில் அமெரிக்காவில் லீக் சுற்றின் முக்கிய போட்டிகள் நடைபெற இருக்கின்றது. இதனால் அங்கு உள்ள ஆடுகளம் தன்மை குறித்து தெரிந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது

இதில் முதல் டி20 போட்டி ஹவ்ஸ்டன் பகுதியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் 14 ரன்களிலும் சௌமியா சர்க்கார், 20 ரன்களிலும் கேப்டன் நஜ்முல் ஹுசைன் மூன்று ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் தவ்ஹீத் ஹிர்தாய் அபாரமாக விளையாடி அரை சதம் கடந்தார்.அவர் 47 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் இரண்டு சிக்சர்களும் அடங்கும். இறுதியில் முஹம்மதுல்லா 31 ரன்கள் எடுக்க ஷகிபுல் ஹசன் 6 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதனால் வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் தான் எடுத்தது.
இதை அடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஸ்டீவன் டைலர் 28 ரன்களிலும், கேப்டன் மோனா பட்டேல் 12 ரன்களிலும் ஆண்ட்ரீஸ் கவுஸ் 23 ரன்களிலும், ஆரன் ஜோன்ஸ் 4 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். முன்னாள் நியூசிலாந்து அதிரடி வீரரான கோரி ஆண்டர்சன் அமெரிக்க அணிக்காக தற்போது விளையாடி வருகிறார்.
அவர் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். அவருக்கு ஹம்பிரிட் சிங் உறுதுணையாக நின்று 13 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். இதனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அமெரிக்க அணி 19.3 எல்லாம் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை பெற்றது. கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் தோற்றுப் போனது வங்கதேச ரசிகர்களை அதிர்ச்சி அடைய இருக்கிறது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அமெரிக்க அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.