சர்ச்சைக்குரிய முடிவுகள்
வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்து வரும் டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் தான் இந்த சர்ச்சை நடந்துள்ளது. ஏற்கனவே, இந்த தொடரில் அம்பயர்கள் சர்ச்சைக்குரிய முடிவுகள் அளித்து வருவதால் வெஸ்ட் இண்டீஸ் அணி கோபத்தில் உள்ளது.
கேட்ச் கொடுத்த லிட்டன் தாஸ்
இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓஷேன் தாமஸ் வீசிய பந்தில் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் பேட் எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்தார். ஆனால், அம்பயர் தான்விர் அஹ்மது இதற்கு நோ பால் கொடுத்தார்.
களத்தில் விவாதம்
ஆனால், ரீப்ளேவில் அது நோ பால் இல்லை என தெரிந்தது. அதை கண்டு கோபம் அடைந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கார்லோஸ் பிராத்வைட் அம்பயர்களை முடிவை மாற்றுமாறு கூறினார். ஆனால், அதற்கு அம்பயர்கள் மறுக்கவே நீண்ட நேரம் போட்டி தடை பட்டு களத்தில் விவாதம் அரங்கேறியது.
ஃப்ரீ ஹிட்டில் சிக்ஸ்
ஒரு கட்டத்தில் ரெப்ரீ, மூன்றாவது அம்பயர் ஆகியோர் தலையிட்டு முடிவை மாற்ற முடியாது என அறிவித்தனர். இதையடுத்து அது நோ பால் தான் என உறுதி செய்யப்பட்டு ஃப்ரீ ஹிட் வழங்கப்பட்டது. அதுவும் சிக்ஸ் ஆகி, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது.
அம்பயர் கொடுத்த விளக்கம்
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் இந்த போட்டியில் வெற்றி பெற்றதால், அம்பயர் கொடுத்த நோ பால் சர்ச்சை பெரிதாகாமல் தப்பித்தது. அம்பயர் தான்விர் அஹ்மது இது பற்றி அளித்த விளக்கத்தில், "பௌலரின் காலும், கிரீஸ் கோடும் நெருக்கமாக இருந்தால் நோ பால் முடிவு எடுப்பது கடினமே. பௌலர் பந்துவீசி முடிக்கும் போது குதித்தால் நோ பால் குறித்து கூறுவது இன்னும் கடினம். நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு புதிது. அதனால் தவறு செய்து விட்டேன்" என கூறி உள்ளார்.
இவருக்கு சர்ச்சை புதிதல்ல
இந்த அம்பயருக்கு சர்ச்சை ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே, தாகா பிரீமியர் லீக் என்ற வங்கதேச உள்ளூர் கிரிக்கெட் தொடரில் கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், போட்டி நடக்கும் மைதானத்தை விட்டு பாதியிலேயே வெளியேறினார்.