டாக்கா: இந்தியா-வங்கதேசம் நடுவேயான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாசில் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்களை குவித்தது.
வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்தியா 1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகிறது. டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், முதல் 2 ஒருநாள் போட்டிகளையும் வங்கதேசம் எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றியது.

3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மிர்பூர் ஸ்டேடியத்தில் நடக்கிறது. டாசில் வெற்றி பெற்ற வங்கதேச கேப்டன் மொர்டசா முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.
தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 29 ரன்களில் அவுட் ஆனபோதிலும், மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 75 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ராயுடு 44 ரன்களும், ரெய்னா 38 ரன்களும் குவிக்க, பேட்டிங் வரிசையில் கோஹ்லிக்கு அடுத்ததாக இறங்கிய டோணி கேப்டனுக்குரிய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 69 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி வழக்கம்போல ஏமாற்றி 25 ரன்களில் ஷகிப் அல் ஹசன் பந்தில் கிளீன் பௌல்ட் ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்களை குவித்துள்ளது. வங்கதேசம் தரப்பில், மொர்டசா 76 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், முஸ்தபிகுர் ரஹ்மான் 57 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் போட்டியில் 5, இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அச்சுறுத்திய ரஹ்மானுக்கு எதிராக இன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும், 3 ஆட்டங்களில் அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார்.
முன்னதாக, இந்திய அணியில் இருந்து ரவீந்திரஜடேஜாவுக்கு கல்தா கொடுக்கப்பட்டது. புவனேஸ்வர்குமாரும் நீக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு பதிலாக உமேஷ் யாதவ் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வங்கதேச அணியில் காயமடைந்த டஸ்கினுக்கு பதிலாக, அராபத் சன்னி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.