லாகூர்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரின் 4வது போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. வங்கதேச அணி விளையாடிய முதல் போட்டியில் இலங்கை அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயம் வங்கதேச அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டி லாகூரில் நடப்பதால், பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் சென்ற ஆஃப்கானிஸ்தான் அணி, வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்தது.
இதனால் இந்தப் போட்டியில் வங்கதேச அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேசுகையில், முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேபோல் வானிலையில் நல்ல வெப்பம் உள்ளது. எங்கள் அணியில் 3 மாற்றங்களை செய்துள்ளோம். கடந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினோம்.
அதுவே எங்களின் தோல்விக்கு காரணமாக மாறியது. இன்றைய ஆட்டத்தில் நல்ல இலக்கை நிர்ணயிப்போம் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிதி பேசுகையில், நாங்களும் பேட்டிங் செய்யவே விரும்பினோம். எங்களுக்கு இங்கு நல்ல ஆதரவு இருக்கிறது. ஆசியக் கோப்பைக்கு முன் பாகிஸ்தானுடன் விளையாடியது நல்ல பயிற்சியாக அமைந்தது. 2 ஆல் ரவுண்டர்கள், ஒரு வேகப்பந்துவீச்சாளர், 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.