ஜெய்ப்பூர்: முன்னாள் ஐபிஎல் ஆணையரும், பல கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுக்குள்ளானவரும், இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டவருமான லலித் மோடி, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மோடியைத் தடுக்க ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தையே சஸ்பெண்ட் செய்ய அது முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் லலித் மோடி போட்டியிட்டார். இதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தது இந்திய கிரிக்கெட் வாரியம். ஆனால் இதற்கு எதிராக லலித் மோடி சுப்ரீம் கோர்ட் வரை போனார். சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பி்ல் தேர்தல் நடந்தது. தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி முடிவை வெளியிட்டுள்ளனர். இதில் தலைவராக லலித் மோடி தேர்வாகியுள்ளார்.
தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே நடந்து முடிந்து விட்டது. ஆனால் தற்போதுதான் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மோடி அமோக வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் உள்ள 33 வாக்குகளில் அவருக்கு 24 வாக்குகள் கிடைத்துள்ளன.
ஊழல் புகார்கள், வழக்குகளைத் தொடர்ந்து லண்டனுக்கு ஓடிப் போய் வி்ட்டார் லலித் மோடி. கடந்த 4 வருடமாக அங்கேயேதான் அவர் வசித்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
சங்கத்தின் புதிய செயலாளராக சோமேந்திர திவாரியும், பொருளாளராக பவன் கோயலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். லலித் மோடியின் நெருங்கிய நண்பரும், சட்ட ஆலோசகருமான மகமூத் அப்தி துணைத் தலைவராக தேர்வாகியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதிதான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மோடிக்கு ஆயுட்காலத் தடை விதித்து உத்தரவிட்டது என்பது நினைவிருக்கலாம்.
கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனுக்கும், லலித் மோடிக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது அப்போது. சீனிவாசனை கடுமையாக எதிர்த்தும் வந்தார் லலித் மோடி. இந்த நிலையில் லலித் மோடி தற்போது ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராகியுள்ளார்.