டெல்லி: போதைப் பொருள் எடுத்துக் கொண்டதற்காக தடை விதிக்கப்பட்ட பஞ்சாபின் விக்கெட் கீப்பர் அபிஷேக் குப்தா, துலீப் கோப்பை போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் மாற்றப்பட்டார். இருந்தாலும், இந்த குழப்பத்துக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
உள்ளூர் போட்டியான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும், இந்தியா புளு, இந்தியா ரெட், இந்தியா கிரீன் என மூன்று அணிகளுக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதில் இந்தியா ரெட் அணியில், பஞ்சாபைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அபிஷேக் குப்தாவின் பெயர் இடம்பெற்றிருந்தது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருள் எடுத்துக் கொண்டதாக 8 மாதங்கள் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடை செப்டம்பர் 14ம் தேதிதான் முடிவுக்கு வருகிறது.
தடை காலம் முடிவதற்கு முன்பே, அவரை அணியில் சேர்த்தது குறித்து சர்ச்சை எழுத்தது. அதையடுத்து அவருக்குப் பதிலாக அக்ஷய் வாட்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருந்தாலும், தடை விதிக்கப்பட்ட வீரர் அணியில் சேர்க்கப்பட்டது எப்படி என்ற சர்ச்சை தொடர்கிறது.