
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜீரோ
ஒருநாள், டி20 போட்டிகளில் காட்டு காட்டும் ரோஹித் இதுவரை தன்னை டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக நிரூபித்ததில்லை. இந்திய கண்டிஷன்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் திணறும் ரோஹித், வெளிநாடு கண்டிஷன்களிலும் பெரிதாக ஒன்றும் செய்ததில்லை. எனினும், கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், ஓரளவுக்கு டீசன்ஸி காட்டினார் ரோஹித். ஓரளவுக்கு நேர்த்தியாக, ஐடியாவோடு விளையாடினார்.

இங்கிலாந்திலும் மோசம்
வெளிநாடுகளில் இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 945 ரன்கள் எடுத்துள்ளார் ரோஹித். பெஸ்ட் ஸ்கோர் 79. ஆவரேஜ் 27.00. குறிப்பாக, இங்கிலாந்தில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடியிருக்கிறார். இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 34 ரன்கள். இவரது சிறந்த ஸ்கோரான 79 இலங்கையில் அடித்தது தான்.

பாணியை மாற்றிவிட்டார்
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவின் சிறந்த ஆட்டங்கள் இனிமேல் தான் வெளிவரப்போகின்றன என்று இந்திய பேட்டிங் அணியின் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "ரோஹித் சர்மா தனது ஆட்டம், எண்ணங்கள், இலக்கு மற்றும் தனது சிறப்பான செயல்பாடு எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று தெளிவோடு இப்போது இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதிக்கும் ஆட்டமும் திறமையும் ரோஹித்துக்கு எப்போதும் இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தனது விளையாட்டு பாணியின் ஐடியாவை மெருகேற்றியுள்ளார். 2020 முதல், ஒரு டெஸ்ட் ஓப்பனராக அவர் களமிறங்க தொடங்கியதில் இருந்து, அவர் ரெட் பால் கிரிக்கெட்டை அணுகும் விதத்தை நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள்.

நின்னுட்டா போதும்
அவர் எப்போதும் மிகத்தீவிரமான விளையாட்டுத் திட்டத்தையும், பாணியையும் கொண்டிருப்பார். இதனால், லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட்டில் அவரால் அதிக ரன்களை குவிக்க முடிந்தது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகுவதில் அவர் அவ்வளவு உறுதியாக இருந்திருக்க மாட்டார். ஆனால் இன்று டெஸ்ட் போட்டிகளில் நீங்கள் ரோஹித்தை பார்க்கிறீர்கள். அவர் தனது ஆட்டம் குறித்த திட்டத்தோடு வருகிறார். அவர் உணர்வுபூர்வமாக அதைச் செய்யத் தொடங்கினார். இப்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இன்னிங்ஸை மிகவும் நிதானமாகவும், நீட்டாகவும் தொடங்குகிறார். அவர் களத்தில் தனது இருப்பை நிலைநிறுத்த விரும்புகிறார். களத்தில் சிறிது நேரம் நின்றுவிட்டால், அவரது திறமை என்ன என்பது பின்னர் நமக்கு தெரியும்.

விளாசித் தள்ளுவார்
"நீங்கள் அவருடைய First-Class சாதனைகளை பார்த்தால், அவர் எப்போதும் மிகப்பெரிய சாதனைகளை பெறுபவர் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒருநாள் மற்றும் டி 20 கிரிக்கெட்டில் கூட, அவர் 105, 110, 115 என்று ஆட்டத்தை முடிந்துவிடுவதில்லை. அதைத் தாண்டியும் அடித்துக் கொண்டே இருப்பார். கடந்த சில மாதங்களில், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் தனது திறனைக் காட்டியுள்ளார். அவர் இப்போது உலகின் எந்தவொரு தாக்குதலையும் விளாசித் தள்ளும் திறன் கொண்டவராக இருக்கிறார்.

பெஸ்ட் ரோஹித்
நான் எதிரணிகளை எச்சரிக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில், அவர் இப்போதுதான் தனது கணக்கை தொடங்கியுள்ளார். அவர் தொடர்ந்து இப்படியே விளையாடினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் வித்தியாசமான ரோஹித்தை நீங்கள் பார்ப்பீர்கள். அவருடைய மிகச் சிறந்த ஆட்டம் இனிமேல் தான் வர உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











