மும்பை: 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இணைந்து நடத்தவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கும் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் இயக்குநராக செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் உலகக் கோப்பைப் போட்டி வரை பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், துணை பயிற்சியாளர்களான ஸ்ரீதர், சஞ்சய் பாங்கர், பரத் அருண் ஆகியோரும் தங்களது பணியில் நீடிப்பார்கள் என்றும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துக்குச் சென்றிருந்த இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரில் செம அடி வாங்கியது. இதனால் கடும் அதிருப்தி அலைகள் இந்தியாவில் எழுந்தன. இதையடுத்து ஒரு நாள் தொடரில் தப்பிப் பிழைப்பதற்காக ரவி சாஸ்திரியை இயக்குநராக நியமித்தது கிரிக்கெட் வாரியம். இந்தப் பதவி புதிதாக உருவாக்கப்பட்டதாகும்.
மேலும் ரவி சாஸ்திரிக்கு பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் ரிப்போர்ட் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. கூடுதலாக சஞ்சய் பாங்கர், பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோரும் இணைப் பயிற்சியாளர், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சிக்காக நியமிக்கப்பட்டனர்.
இவர்களின் நியமனத்திற்குப் பின்னர் நடந்த ஒரு நாள் தொடரை இந்தியா சிறப்பாக ஆடி வென்றது. இதையடுத்து தற்போது சாஸ்திரி அன் கோவின் பதவிக்காலத்தை நீட்டித்துள்ளது கிரிக்கெட் வாரியம்.
இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் செயற் குழு கூடி இவர்களின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டித் தொடர் வரை நீட்டித்து முடிவெடுத்தது.