சச்சின் டெண்டுல்கருக்கு பாலி உம்ரிகர் விருது

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விருதுகள் வழங்கும் விழா நேற்று மும்பையில் எளிமையான முறையில் நடந்தது.
இந்த விழாவின்போது உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர். அணி வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்த ரொக்கப் பரிசான தலா ரூ. 2 கோடிக்கான காசோலையும் வீரர்களுக்கு அளிக்கப்பட்டது.
மேலும் இந்த விழாவில் பல்வேறு விருதுகளையும் அளித்து கிரிக்கெட் வாரியம்
கெளரவித்தது.
நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கருக்கு 2009-10ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான பாலி உம்ரிகர் விருது அளிக்கப்பட்டது.
2009-10ல் சச்சின் ஒரு நாள் போட்டிகளில் உலகின் முதல் இரட்டை சதத்தைப் போட்டு உலக சாதனை படைத்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 1064 ரன்களையும் குவித்தார். பாலி உம்ரிகர் விருதை சச்சின் பெறுவது இது 2வது முறையாகும்.
விருது பெற்ற பிறர் விவரம்:
சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனை விருது -சலீம் துரானி
ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் - மணீஷ் பாண்டே
ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் - அபிமன்யூ மிதுன்
சிறந்த வீராங்கனை (சீனியர்) - திருஷ்காமினி (தமிழகம்)
சிறந்த வீராங்கனை (ஜூனியர்) - ரேவா அரோரா (பஞ்சாப்)
சிறந்த யு-22 வீரர் - நடராஜ் பெஹரா (ஒரிசா)
சிறந்த யு-19 வீரர் - பார்கவ் மேராய் (குஜராத்)
சிறந்த யு-16 வீரர் - அபராஜித் (தமிழகம்)
சிறந்த நடுவர் - கே.ஹரிகரன்
சிறந்த ஒட்டுமொத்த செயல்பாடு - மகாராஷ்டிரா
நிகழ்ச்சியில், கலந்து கொண்ட கேப்டன் டோணி பேசுகையில், இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்தியாவில் உள்ள 100 கோடி மக்கள் மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு வெளியேயேயும் உலகெங்கும் உள்ள இந்தியர்கள் விரும்பினர். இதற்காக அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
மேலும் அவர் கூறுகையில், பள்ளிக்கூட கிரிக்கெட் முதல் இன்று உள்ள இடம் வரை நாங்கள் அனைவரும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்க கிரிக்கெட் வாரியத்தின் ஊக்குவிப்புப் பணிகள்தான் முக்கியக் காரணம். இதற்காக கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற விரும்புகிறேன். அதேசமயம், அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களின் திறமையையும் யாரும் மறநந்து விட முடியாது. சிறந்த முறையில் எங்களது திட்டங்களை நிறைவேற்ற அவர்கள் ஆற்றிய பணிகள் மிகப் பெரியவை, பாராட்டுக்குரியவை என்றார் டோணி.
சச்சின் பேசுகையில் டோணியை வெகுவாகப் பாராட்டினார். சிறந்த கேப்டனாக டோணி செயல்படுவதாக பாராட்டிய சச்சின், இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதலிடத்தைப் பிடித்ததற்கும், உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடியதற்கும் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.
Story first published: Wednesday, June 6, 2012, 17:01 [IST]
Other articles published on Jun 6, 2012


Click it and Unblock the Notifications